பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடியும் படையும்

79

திருப்பேரை என்பது அப்பெயரின் குறுக்கம். வைணவத் திருப்பதிகளில் வடநாட்டில் திருப்பேர் நகர் ஒன்று இருத்தலால், இதனைத் தென் திருப்பேரை என்று அழைத்தார்கள். தென் திருப்பேரி என்பது இன்று அவ்வூர்ப் பெயராக வழங்குகின்றது. இன்னும், வட ஆர்க்காட்டிலுள்ள செஞ்சிக் கோட்டையின் அருகே எய்யல் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உண்டு. எயில் என்பதே எய்யல் எனச் சிதைந்துள்ளது.

அகழி

சேலம் நாட்டு ஆற்றுர் வட்டத்திலுள்ள ஆறகளூர் முற்காலத்தில் சிறந்ததொரு கோட்டையாக விளங்கிற்று. அங்குள்ள திருக்காமேச்சுரம் என்னும் சிவாலயத்திற்குப் பெருநில மன்னரும், குறுநில மன்னரும் அளித்த நன்கொடைச் சாசனங்களிலே அவ்வூருக்கு அண்மையில் பெரியாரை என்னும் பெயருடைய கோட்டையொன்று இருந்தது. அதன் அடையாளம் இன்றும் காணப்படுகின்றது. இப்போது அந்த இடம் பெரியேரி என்று வழங்குகின்றது.

இஞ்சி

கோட்டையின் மதிற்சுவர் இஞ்சி என்ற சொல்லாற் குறிக்கப்படும். பாண்டி நாட்டில் மதுரைக்கு அண்மையில் வட பழஞ்சி, தென் பழஞ்சி என்னும் ஊர்கள் உள்ளன. பழஞ்சி என்பது பழ இஞ்சி என்பதன் சிதைவாகத் தோன்றுகின்றது. இவற்றால் பண்டைய நகரத்தின் கோட்டை மதில்களின் எல்லையை ஒருவாறு அறிந்துகொள்ளலாகும். நெல்லை நாட்டில் நாங்குனேரிக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்தில் பெரும் பழஞ்சி, சிறு பழஞ்சி