பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

ஊரும் பேரும்

குலத்தினர் ஆளும் நாடு புதுக்கோட்டை என்று அழைக்கப்படுகின்றது. தொண்டைமான் ஆட்சியைத் தோற்றுவித்த இரகுநாதன் என்பவர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்,புதிதாக ஒரு கோட்டை கட்டி, அதற்குப் புதுக்கோட்டை என்று பெயரிட்டார். அவர் காலத்தில் அது தலைநகரமாகச் சிறந்திருந் தமையால், அக்கோட்டையின் பெயரே நாட்டின் பெயராயிற்று. இன்னும், பட்டுக் கோட்டை, தலைவன் கோட்டை, உக்கிரன் கோட்டை முதலிய ஊர்ப் பெயர்களில் கோட்டை என்னும் சொல் அமைந்திருக்கக் காணலாம்.

துர்க்கம்

மலைகளில் அமைந்த கோட்டை, துர்க்கம் என்று பெயர் பெறும். தமிழ் நாட்டில் சில துர்க்கங்கள் உண்டு. ஆர்க்காட்டு வள்ளிமலைக்கருகேயுள்ள நெடிய குன்றத்தில் அமைந்த கோட்டை மகி மண்டல துர்க்கம் என்று குறிக்கப்படுகின்றது. அம்மலை மூன்று திசைகளில் செங்குத்தாக ஓங்கி நிற்கின்றது. மற்றைய திசையும் மதிற் சுவர்களால் செப்பமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

காவல்

இன்னும், பெருங் கோட்டைகளைப் பாதுகாப்பதற்கும், பகைவர் வருகையை அறிந்து தெரிவித்தற்கும் சில அமைப்புகள் முற்காலத்தில் இருந்தன. அவை கோட்டையின் பாதுகாப்புக்காக ஏற்பட்டமையால் காவல் என்று பெயர் பெற்றன. கோயம்புத்துரைச் சேர்ந்த நடுக் காவல் என்னும் ஊரும், செங்கற்பட்டிலுள்ள கோட்டைக் காவலும், உத்தர கெடிக்காவலும் இத்தன்மை வாய்ந்தன என்பது தெரிகின்றது.