பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடியும் படையும்

85

வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்திலுள்ள ஆம்பூர் என்பது சாசனங்களில் ஆண்மையூர் என்று பெயர் பெற்றுள்ளது. அங்குள்ள நடுகல்லில், வில்லும் வாளும் தாங்கிய வீரன் ஒருவன், மாற்றார் அம்புகள் உடலிற் பாய்ந்தும் முனைந்து நிற்கும் நிலை காட்டப்படுகின்றது: பகைவர்க்குப் புறங்கொடாது விழுப்புண் பட்டு வீழ்ந்த அவ்வீரனது பெருமைக்கு அறிகுறியாக ஆண்மையூர் என்று அதற்குப் பெயரிட்டனர் போலும்!

வீர விருதுகள்

வீரம் செறிந்த தமிழ் நாட்டில் வாழ்ந்த சில பெருநில மன்னரும், குறுநில மன்னரும் அரிய வீரச் செயல்களால் அழியாப் புகழ் பெற்றனர். அவர் பெற்றிருந்த பட்டங்கள் வெற்றி விருதுகளாக விளங்கின. செய்யாற்றங்கரையில் நிகழ்ந்த கடும் போரில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவன், செய்யாற்று வென்றான் என்ற பட்டம் பெற்றான். அவ்வாறே பாலாற்றங் கரையில் நிகழ்ந்த பெரும் போரில் மாற்றாரை வென்ற வீரன் ஒருவன், பாலாற்று வென்றான் என்று பாராட்டப் பெற்றான். செய்யாற்று வென்றான் என்பதும், பாலாற்று வென்றான் என்பதும், ஆர்க்காட்டு வட்டத்தில் ஊர்ப் பெயர்களாக விளங்குகின்றன. நெல்லை நாட்டில் சென்றவிடமெல்லாம் செருவென்ற சிறந்த படைத் தலைவன் ஒருவன் எப்போதும் வென்றான் என்னும் உயரிய பட்டம் பெற்றான். அப்பட்டம் இன்றும் ஓர் ஊரின் பெயராக நின்று நிலவுகின்றது.

போர்க்களத்தில் தனித்தனியே வீரம் விளைத்துப் புகழ் பெற்ற ஆண்மையாளரும் தமிழ்நாட்டில் உண்டு. ஒரு