பக்கம்:தமிழக ஆட்சி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆராய்ச்சிக்குரிய மூலங்கள்

9



தன்னை மகாமல்லன் (மாமல்லன்) என்று அழைத்துக் கொண்டான். அவனால் சீர்திருத்தப்பெற்ற துறைமுக நகரம் ‘மாமல்லபுரம்’ என்ற பெயரைப் பெற்றது. இச்செய்திகள் அனைத்தும் ‘மாமல்லபுரம்’ என்ற தொடரில் அடங்கி இருக்கின்றன.

வேள்விக்குடி, பிரமதேசம், பிரமபுரி, சதுர்வேதி மங்கலம், உத்த மதானபுரம் என்ற ஊர்களின் பெயர்கள், பண்டைத் தமிழக மன்னரால் பிராமணர்க்குத் தானமாக விடப்பட்டவை என்ற உண்மையை உணர்த்துகின்றன. ஹேமகர்ப்பம் முதலிய பதிஞ்று வகைத் தானங்கள் மகாதானங்கள் என்று வடமொழி நூல்களில் கூறப்பெறும். ‘மகாதானபுரம்’ என்ற ஊரின் பெயர், தமிழக வேந்தர் மகாதானம் செய்த உண்மையைப் புலப்படுத்துகின்றது அன்றோ?

‘கங்கைகொண்ட சோழபுரம்’ என்ற நகரப் பெயரும், ‘கங்கைகொண்ட சோழேச்சரம்’ என்ற கோவிற் பெயரும், ‘கங்கைகொண்டான்’ என்ற ஊர்ப் பெயரும், ‘கங்கை கொண்டான் மண்டபம்’ என்ற மண்டபப் பெயரும் முதல் இராசேந்திரசோழன் வழியில் அரசர் பலரை வென்று கங்கை நீரைக் கொணர்ந்த செய்தியை இன்றளவும் குறித்து நிற்கின்றன. இவ்வாறே முடிகொண்டான் என்ற ஆற்றின் பெயர், சோழன் வேற்றரசன் முடியைக் கொண்ட வெற்றியைக் குறித்திருக்கிறது. கிருஷ்ணாபுரம் என்பது கிருஷ்ணப்ப நாயகர் பெயரைத் தாங்கி இருக்கின்றது. அங்கு அவ்வரசர் கட்டிய அற்புத வேலைப்பாடமைந்த பெருமாள் கோவில் இருக்கின்றது. நாயக்க மன்னரது சமயத் தொண்டை விளக்க இது மிகச்சிறந்த சான்றாகும்.

இவ்வாறு சில ஊர்களின் பெயர்கள், ஆறுகளின் பெயர்கள், கோவில்களின் பெயர்கள் முதலியன தமிழக ஆட்சிபற்றிய சுவையுள்ள செய்திகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு அழியாத சான்றுகளாக இன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/16&oldid=504901" இலிருந்து மீள்விக்கப்பட்டது