பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

 கபிலர் அம்மலை நாட்டுக் கிளிகளைப் பழக்கிவிட, அவை சேணெடும் துாரம் சென்று, ஆங்கு விளைந்து முற்றியிருக்கும் நெற்கதிர்களைக் கொய்து கொண்டு வந்து தந்த வண்ணம் இருந்தன83

ஆண்டு பல ஆயினும், பாரி, பறம்பு மலையைக் கைவிடான். அதைக் கைப்பற்றல் மூவேந்தர்களால் இயலாது; ஆகவே முற்றுகையைக் கைவிடுங்கள் என்ற அறிவுரையை வேந்தர்களுக்கு வழங்க விரும்பினார் கபிலர். விரும்பியவர்: ஒரு நாள், கோட்டையின் தலையகத்தே நின்று வேந்தர்களை விளித்து, "பறம் பரணைப் படையால் கைக்கோடல் இயலாது; ஆடல் மகளிர் போல் வந்து இரந்து நிற்பீராயின், பறம்பை மட்டுமன்று தன்னையும் கொடுத்துவிடுவன் பாரி" எனக் கூறி விட்டார்.84 முற்றுகை ஒழிய வேண்டும் என்ற நல்லுணர்வில் கபிலர், அது கூற, மூவேந்தர், அவர் கூறியவாறே வந்து பாரியைப் பரிசிலாகப் பெற்றுக் கொன்றுவிட்டு பறம்பரணைத் தமதாக்கிக் கொண்டனர்.85

பாரி இல்லாமல் போகவே, அவன் மகளிர் இருவரையும் அழைத்துக் கொண்டு, பறம்பு நாடுவிட்டுப் புறப்பட்டு, அவ்விருவர்க்கும் மணமுடிக்க வேண்டியது பாரியின் உற்ற நண்பராகிய தம் கடமை என்பதால் முதற்கண் விச்சிக்கோவிடம் சென்று வேண்ட86 அவன் மறுக்க,இருங்கோவேள்பால் சென்று வேண்ட87 அவனும் மறுக்கவே, தமக்கு வேண்டிய பார்ப்பார் சிலர்பால் அம்மகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர் துறந்தார் கபிலர். பாரியின் வரலாறாக அறியத்தக்கன இவ்வளவே.