பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177

 அதன் தலைவன் வாட்போரில் வல்லவன். கொடை உள்ளமும் பெற்றவன். பகைவரை அழித்துப் பெறும் பொருளையெல்லாம் பண்ணன், தன்னைப் பாடி வரும் பரிசிலர்க்கே அளிக்கும் அருள் உள்ளம் பெற்றவன்' என புலவர், சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும் பியார் என்பார் பண்ணன் சிறப்பைப் போற்றியுள்ளார்.208

86. வாணன்

வாணன் என்ற பெயருடையார் இருவர் பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியப் பாடல் வரிகளில் காணக் கிடைக்கின்றன. ஒருவன், பாண்டி நாட்டில், நெய்தல் நிலத்தைச் சார்ந்த மருத நிலத்து ஊரான சிறுகுடி எனும் பெயருடைய ஊரில் வாழ்ந்தவன்.209 பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரால் அமைந்த பெருங்குளம் ஒன்று அமையப் பெற்ற வளம் கொண்ட ஊரை உடையான். வற்றாப் பெருஞ்செல்வமுடையான் என நக்கீரர் அவ் வாணனைப் பாராட்டியுள்ளார்210

மதுரைக் காஞ்சி ஆசிரியர். புலவர் மாங்குடிகிழார். தென்புல த் தை ச் சார்ந்த வாணன் என்ற பெயருடையான் ஒருவன் சேர்த்து வைத்துள்ள பெருஞ் செல்வத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்211 அதற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியனாரும், "தென்திசை நிலத்தின் மலைகள் எல்லாம் நிறையும் படி வாணன் என்னும் சூரன் வைத்த சீரிய பொருட்டிரள்" என்றே பொருள் கூறியுள்ளார். இவற்றை நோக்க, வாணன் என்னும் பெயருடையார் இருவரும் வேறு வேறானவர் அல்லர், ஒருவரே எனக் கோடல் பொருந்தும்.