பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

உடல் நலம் கெட்டிருந்த வெளிமநன் உயிர் துறக்கும் நிலையை எய்தி விட்டான். அந்நிலையிலும் புலவரை அன்புடன் அழைத்து அவர் பாடலைக் கேட்டு மகிழ்ந்து, அங்கிருந்த தம்பி இளவெளிமான் என்பவனை அழைத்து புலவர்க்கு அவர் வேண்டும் பரிசில் அளித்து அனுப்புக எனப் பணித்தான். அந்நிலையிலேயே உயிர்துறந்தான். வெளிமான் மறைவு கேட்ட புலவரெல்லாம் வருந்தி வாடினர், அவன் புகழ் பாடினர் 217

90. வேங்கை மார்பன்

பாண்டிய, நாட்டில் கானப்பேரெயில் என்ற அரண் அமைத்து ஆண்ட தலைவன் வேங்கை மார்பன். இன்று காளையார் கோயில் என வழங்குமிடத்தே, ஆழ்ந்த அகழியினையும், வானளாவிய நெடிய மதில்களையும் அடர்ந்த காவற் காட்டினையும் அமைத்து அவன் உருவாக்கிய கானப் பேரெயில் பகைவர் பற்றற்கரிய பேரரணாய் அமைந்தது.

வேங்கை மார்பனின் சிறப்பினைக் கண்டு மனம் பொறாத பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி பெரும் படையுடன் கானப் பேரெயிலை முற்றிகையிட்டான். வேங்கை மார்பனை வென்றான். பற்றற்கரிய கானப் பேரெயிலைக் கைப்பற்றினான்: கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனும் சிறப்பினையும் பெற்றான். கொல்லன் உலைக்களத்தே சிவக்கக் காய்ந்த இரும்பு உண்ட நீரை மீண்டும் பெறல் இயலாது என வேங்கை மார்பன் மனம் வருந்தினான். 218