பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

செல்லூர் அல்லது செல்லீ என வழங்கப் பெறும் ஊர் இருந்தது. அச்செல்லூர்க்கு கிழக்கே அமைந்திருந்த நியமம் எனும் ஊரே கோசர்க்கு உரிய ஊராக இருந்தது.13

போர்ப் படை வீரராய் விளங்கிய கோசர், உழவுத் தொழிலையும் மேற்கொண்டிருந்தனர். கோசர் விளைநிலத்தில் அன்னி மிஞிலி என்பாளுடைய தந்தையின் பசு புகுந்து மேய்ந்துவிட்டது. பெருஞ்சினம் கொண்ட கோசர், மிஞிலியின் தந்தை கண்களை அழித்துவிட்டனர். கோசரின் கொடுஞ் செயல் கண்டு கடுஞ்சினம் கொண்ட மிஞிலி அவர்களைப் பழி வாங்க, அழுந்தூர்க்குடையோனாய திதியன் பால் சென்று உதவி கோரினாள். திதியன் தவறு செய்த கோசரை வென்று அழித்தான்.14

பாழி நகர்த் தலைவனான நன்னன், அவன் அரண்மனைத் தோட்டத்து மாங்காய் ஒன்று ஓடையில் மிதந்து வர அதை அறியாது தின்ற இளம் பெண்ணைக் கொன்று பழி சுமந்தான். அப்படுகொலைக்குக் காரணமாயிருந்த நன்னனின் காவல் மரமான மாமரத்தை வெட்டித் தம் நாட்டிற்குக் கொண்டு சென்று பழி தீர்த்தனர் கோசர்15

நன்னனின் துணைவனாக விளங்கியவன் ஆய் எயினன் என்பான். அவன் நன்னனுக்குரிய பாழியைக் கைப்பற்ற வந்த மிஞிலி என்பானோடு போரிட்டு மாண்டான். நண்பனான ஆய் எயினனுக்குத் துணையாக போர்க்களம் புகவோ, தன்பொருட்டு உயிர் துறந்த அவன் உரிமை மகளிர் துயர் துடைக்கவோ செய்யாது வாளாவிருந்தான் நன்னன். அம் மகளிர் துயர் கண்டு மனம் பொறாத கூடல் நகர்