பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


ராகவே கூறப்பட்டுள்ளமையாலும், சாத்தந்தையாரின் தித்தன் மகன், மற்போர் வீரன் ஆதல் போலவே, பரணரின் தித்தன் வெளியனும், மற்பேரர் வீரனாம் ஆதலாலும், இருவருமே ஒருவர் எனக் கோடல் பொருந்தும் எனக் கொள்ளலாமல்லவோ?

நலங்கிள்ளி

புகார் நகரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவன் இவன். சிறந்த ஆற்றல் வாய்ந்தவன். "பகைவர் பணிந்து வந்து கேட்டால், என் அரசையும் தருவேன்; அவர்கள் என்னையே அல்லாது, என் அமைச்சர்களையும் மதியார் ஆயின், அவர்களை யானையின் காலின் கீழ் அகப்பட்ட மூங்கில் முளையைப் போல் இல்லாமல் ஆக்கி விடுவேன்"74 என்று வஞ்சினம் கூறும் வல்லாளன்.

"வழி வழி வந்த அரசை முறையாக ஆள மாட்டாது, குடிகள் பால் வரி தண்டியே ஆள நினைப்பன், ஆயின், அவ்வரசு அவனுக்குப் பெரிய பாரமாம். போர் பல வென்று பகைநாட்டுப் பொருள் கொண்டு அரசை நடத்தும் பேராற்றல் வாய்ந்தவனுக்கு, அவ்வரசாட்சி, உலர்ந்து ஒடிந்து வீழ்ந்து போன சுள்ளி போல் எளிதாம்"75 என உரைத்து தான் நல்லாட்சியாளன் என்பதை நாட்டிற்கு அறிவித்தவன்.

குலப் பகைவர்களாகிய, பாண்டிய, சேரர்களின் கொற்றக்குடைகள், தன் பின் தொடர்ந்து வர, தன் குடையே முன் செல்ல வேண்டும் என விரும்பும் தறுகணாளன். அதற்கேற்ற நாற்படையாளன்76