ஆங்கிலேயர் ஆட்சி
339
எனினும், பரந்த பாரதத்தோடு தமிழ்நாடு ஒரு சிறு உறுப்பு நாடாக அமையும் வழியிலே அவர்கள் தமிழ் நாட்டை விட்டுச் சென்றார்கள். இன்று தமிழ்நாடு அகில இந்தியாவின் ஒரு சிறு அங்க நாடாகவே இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் பல தீமைகளுடன் பரந்த பல நன்மைகளும் விரவியே இருந்தன. தமிழ்நாடு பரந்த பாரதத்தோடு ஒன்றிவிட்டதாயினும், தமிழ் நாட்டில் பல புதுவகையான உணர்ச்சிகளும் பிற சில நல்ல இயல்புகளும் தோன்ற வழிசெய்த காலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலமே எனலாம்.
தமிழ் நாட்டின் நிலை:
வாரன் ஹேஸ்டிங்ஸும் அவருக்குப்பின் வந்த கவர்னர் ஜெனரல்களும் பல்வேறு வகையில் சிறந்தவர்களாய் நின்ற காரணத்தால் ஆங்கிலக் கம்பெனி ஆட்சி வளர்ந்து கொண்டே வந்தது. அவர்களுக்கு ஏற்றாற் போன்று இங்கிலாந்தின் பாராளுமன்றமும் அவர்தம் வேண்டுகோளுக்கு ஏற்பப் பலவகையில் உதவியது. கவர்னர் ஜெனரலாக வருபவர்கள் பலரும் அங்குப் பாராளுமன்ற மேல் சபையில் (House of Lords) அங்கம் வகிப்பவர்களாய் இருந்துவிட்டார்கள். எனவே, கம்பெனிக்கு ஆங்கில அரசின் உதவி கிடைப்பது எளிதாகி விட்டது. கி.பி. 1812ல் கம்பெனியின் வாணிபத்துறை நிறுத்தப் பெற்றுக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை ஆளும் உரிமை பெற்ற கம்பெனியாக ஆங்கிலேயப் பாராளுமன்றத்தால் முடிவுசெய்யப்பெற்றது. எனவே, அதுமுதல் இங்குள்ள ஆங்கிலேயர் பொறுப்பு பெற்று ஆளுகைக்கெனவே அமைந்து நின்றனர் இந்தத் தொடக்க நாளிலிருந்து, அவர்கள் 1947ல் இறுதியாக விட்டுச் செல்லும் வரையில் நாட்டை அமைதியாக ஆண்டுகொண்டிருந்தார்கள் என்று