பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தின் வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில் நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவு வாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக சட்டமன்றப் பேரவைத் தலைவராக என பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர்,

புலவர். கா கோவிந்தனார் அவர்கள்

“தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அர்ப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பெற்ற பேறு பெற்றவர். பைந்தமிழ் வல்ல புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ் ஏடுகளிலெல்லாம் திளைத்து, வரலாற்றுக் கண் கொண்டு ஆய்ந்து, தொல்காலத் தமிழர் வாழ்வை இக்காலத்தவரும் தெளிந்திடுமாறு தேன்தமிழ்ச் சுவடிகளாக வரைந்து வழங்கிய பெருமை உடையவர்.

புலவர். கா கோவிந்தனார் அவர்கள்

புலவர்களுள் பெரும் புலவராய்விளங்கி, திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனத்தாரின் புலவரேறு ” பட்டம், தமிழ்க் அரசின் “திரு. வி. க. விருது” மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் “தமிழ்ப் பேரவைச் செம்மல்” பட்டம், போன்ற சிறப்புகளைப் பெற்ற புலவர் அவர்களது தமிழ்ப்பணி பொன் விழா கண்ட பெருமையினையுடையது.

iii