சிவகிரி ஜமீன்தார்
சிவகிரி ஜமீன்தார் இறந்தபோது தோன்றிய பாடல்கள் இரண்டு கீழே தரப்படுகின்றன. அவற்றுள் முதல் பாடல் சிவகிரி ஜமீன்தார் சதியால் கொல்லப்பட்டார் என்றுமறைமுகமாகக் கூறுகிறது. அவர் இறந்த இடம் குற்றாலம். சிறிய ஜமீன்தாரை சின்னசாமி என்று அழைப்பதுண்டு. அவர் வடக்கேயிருந்து வருகிறார் என்று அவரைப் பார்க்க மக்கள் கூடியிருக்கிறார்களாம்.
இரண்டாவது பாடலில் ஜமீன்தார் கலியாண மகால் கட்ட உத்தரவிட்டு, அது கட்டி முடிந்து விட்டதாகவும் ஆனால், அம்மகாலில் அவர் உட்காரவில்லையென்றும் அதற்கு முன்னரே கைலாச குழிக்குப் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சிவகிரி ஜமீன்தார்-1
பாக்குப் பொடி நறுக்கி
பல்விளக்கித் தீத்தம் பண்ணி
காப்பித் தண்ணி சாப்பிட்டிட்டு
கச்சேரிய செய்த தெப்ப?
கச்சேரி வாசலிலே
லட்சம் ஜனம் கூடியிருக்க
கருத்த துரை இல்லாம
களையும் பொருந்தலையே
கிறிச்சு மிதியடியாம்
கீ கண்ணுப் பாருவையாம்
வடகா பிரகரைக்கு
வாரதெப்போ நம்ம துரை
சோணப் பாறை மொந்தலிலே
சூரியனும் உதிக்கு முன்னே
மண்டி போட்டுச் சுட்டாராம்
மன்னம் பொன்னு சின்னசாமி
காக்கா இறகு போல
கல்லணைத் தண்ணி போல
மறிச்சாராம் மறிபடாது
மகராஜன் ஆத்துத் தண்ணி