பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாவது பதிப்பிற்கு

முகவுரை


இது 1964-ல் வெளியான தமிழர் நாட்டுப் பாடலின் மறுபதிப்புத்தான். அச்சுப் பிழைகள்,விடுபட்டுப்போன சொற்கள்,வரிகள், இவற்றைத் திருத்தி,சேகரிப்பு விவரங்களில் உள்ள குறைகளைப் போக்கி இதனை வெளியிடுகிறேன்.

கடந்த 12 ஆண்டுகளில் இந்த நூல் அழகிரிசாமி போன்ற இலக்கிய ஆர்வலர்களின் போற்றுதலையும், பத்திரிகைகளின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. இந்தியன் எஃஸ்பிரஸ் விமர்சகர், இந்நூல் பாமர மக்களின் ஆன்மாவையே நமக்குக் காட்டுவதாக எழுதியிருந்தார். இது தனது நோக்கத்தை இந்நூல் நிறைவேற்றி விட்டதென்ற மன நிறைவு எனக்கு உண்டு.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நடைபெற்றிருக்கும் நாட்டுப்பாடல் வெளியீடுகள், ஆய்வுகள்,கருத்தரங்குகள் அனைத்தையும் தொடங்கி வைத்தது இந்த நூல்தான் என்று பெருமையாகக் குறிப்பிடலாம். பல முயற்சிகளுக்கு வழி திறந்து விட்டது இந்த நூல். பல்கலைக் கழகங்களில் ஆய்வு ஆர்வத்தை ஏற்படுத்தி, சில மாணவர்களை இத்துறை ஆய்வுக்குக் கவர்ந்தது தமிழர் நாட்டுப் பாடல்களே.'

இந்நூல் தமிழகப் பல்கலைக் கழகங்களிலும், கேரளப் பல்கலைக் கழகத்திலும், தமிழ்த் துறையில் மூல நூலாக (Source Book) ஆகப் பயன்படுகிறது. ஆசிரியர்களும், ஆய்வாளர்களும், நாட்டுப் பாடல் துறையில் சிறந்த நூல் இதுவென மதிக்கிறார்கள்.

இந்நூல் வெளிவந்த ஒராண்டிற்குள் செலவாகி விட்டது. இந்த நூலின் தாக்கத்தால்,நாட்டுப் பாடல் ஆய்வை ஈழத்தில் மேற்கொண்ட பாலசுந்தரம், இதற்கோர் மறுபதிப்பு தேவையென்று எழுதினார். பல்கலைக் கழகங்களில் பழைய பிரதி பழுதாகிப் புதிய பதிப்புக்குத் தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை வெளியிட நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம் சம்மதித்துள்ளது.