வாழ்க்கையில் ஆதாரமில்லாமற் போயினும், அக்குழு மக்களின் பழைய நம்பிக்கைகளால் ஏற்பட்ட சடங்குகளையும், நடனங்களையும், பாடல்களையும் மறக்கவில்லை.
இவ்வெச்சங்களாகத்தான் சங்க காலத்தின் துணங்கை, வள்ளை, குரவை முதலிய நடனங்கள் இருந்தன. எச்சமாக நின்றவை தவிர, மருத நிலத்தில் புதிய கலைகள் தோன்றின. இவை குழுக்கலைகளாக இல்லாமல், தனிமனிதத் திறமைகளை வெளிப்படுத்தும் கலைகளாகவே இருந்தன. கூட்டு வாழ்க்கை அழிந்து தனிக்குடும்ப முறையும் தனிச்சொத்துரிமையும் வளர்ச்சியடைந்த பின், தனிமனித உணர்ச்சிகள் தோன்றுவது இயற்கையே.
சிற்பக்கலையில் விலங்கு - மனித உருவங்கள் காணப்படுவதற்கு காரணம் என்ன? இவை இருவிலங்குகளின் கலப்பான யாளி போன்றவையாக இருக்கும். ஆனால் அவற்றை விட விலங்கு மனிதக் கலப்போ அதிகமாக இருக்கும். அவற்றில் தலை விலங்கினுடையதாகவும் உடல் மனிதனுடையதாகவும் இருக்கும். இதற்கு மாறியும் இருக்கலாம். எகிப்திலுள்ள ஸ்பிங்ஸ் என்னும் உருவம் மனிதப் பெண்ணின் தலையும் சிங்க உடலும் கொண்டது. அசிரியாவில் வணங்கப்பட்ட ஒரு தெய்வம் மனித ஆண் தலையும், காளை உடலும் கொண்டது. இதற்கு இறகுகள் உண்டு. இந்தியா விநாயகர், நந்தி, கருடன், காமதேனு கூர்மவதாரம், மச்சாவதாரம், முதலிய உருவங்கள் மானிட விலங்குக் கற்பனை உருவங்களே.
இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆயினும் இவையாவும் விலங்காக இருந்து, மானிட உருவத்தோடு இணைக்கப்பட்டவையென்பது அவற்றின் வரலாறுகளிலிருந்து புலனாகும். குலக்குறிச் சடங்கு பற்றி முன்னரே விவரித்தோம். குலங்கள் இணைந்து பெரிதாகும் பொழுது இனக்குழுக் கூட்டங்கள் (Tribal Confederation)
குலங்களுக்கு அதிக உணவு கிடைத்து இனப் பெருக்கம் ஏற்படுவதாலும், அசமத்துவ வளர்ச்சியினால் சில இனக்