பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவரை மனிதாபிமானியாக்கியது. இந்நிலையை ஆறாம் திருமுறை சித்தரிக்கிறது.

உலகில் மனிதனுக்கு வரும் துன்பங்களை எதிர்த்து நிற்க மனிதர் ஒன்றுபட வேண்டுமென இராமலிங்கர் விரும்பினார். அதை விட்டு சமயக் காழ்ப்புகளிலும், சாதி வேறுபாடுகளிலும் உழலும் மனிதர்களைப் பார்த்து அவர் மனம் இரங்கினார். எல்லா உயிர்களையும் நேசிக்கக் கற்று கொள்ளுதலே தலைமையான அறமெனப் போதித்தார். இரக்கம் செயலில் தோன்ற வேண்டுமென உபதேசித்தார்! இதனையே ‘சுத்த சமரச சன்மார்க்க நெறி’யெனப் பெயரிட்டழைத்தார். சாதி, சமயம், மொழி வேறுபாடு, தேச வேறுபாடு ஆகிய பிரிவினை யாவும் கடந்த மனித நேசத்தை நிலை நிறுத்த மனிதர் அனைவரையும், அறை கூவி அழைத்தார். இதற்கென ஒரு நிறுவனமும் அமைத்தார். அதற்குச் சுத்த சமரச சன்மார்க்க சபை என்று பெயரிட்டார்.

கடவுள் நம்பிக்கையுடையவராதலால் தமது புதிய நெறியைக் கடவுள் கட்டளையால் தோன்றியதெனக் கருதினார். மனித குலத்தைப் பிளவுபடுத்தும் சாதி, சமயங்களை அவருக்கு முன்னர் சித்தர்கள் கடுமையாகக் கண்டித்தார்கள். அவர்களுடைய பாடல்களில் ஈடுபட்ட வள்ளலாரும், அவர்கள் வழியிலே முன்னேறி, மனிதன் சுக நிலை அடைய வழிகாட்டுகிறார்.

‘பேருற்ற உலகிலுறு
சமய மத நெறி யெலாம்
பேய் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட் டென
உணர்ந்திடாது மிக்க பல
போருற்றிறந்து வீண்
போயினார் இன்றும் வீண்
போகாதபடி விரைந்தே
புனித முறு சுத்த சன்மார்க்க
நெறி காட்டி


97