பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இக்காலத்தில் சமரசத்தையும், ஒற்றுமையையும் மடத்தலைவர்கள் விரும்பவில்லை.

அப்பொழுதுதான் சைவ சித்தாந்தியான வள்ளலார் மனிதாபிமானத்தினால் உந்தப்பட்டு சமரசவாதியனார். சாதி, சமய பிரிவுகளால் பிரிந்து போரிட்ட மனிதரை மனித நேயத்தால் ஒன்றுபட அழைத்தார். சிவனை வழிபடும் சைவ மதத் தலைவர்கள், சிவனை வழிபட உலகினர் அனைவரையும் ஒன்றுபட அழைத்த இராமலிங்கரை வெறுத்தனர். மதச் சழக்குகளைச் சாடி மக்களை ஒன்று பட அழைத்த அடிகளாரை, தயை தாட்சண்ணியமின்றித் தாக்க நாவலர் போன்ற சைவப் பெருந்தலைகளை ஏவி விட்டனர்.

சைவ மதத் தலைவர்கள் சிதம்பரத்தில் நடராஜனை வழிபடலாமென்றார்கள். நடராஜ நடனத்துக்கு எவருக்கும் விளங்காத முறையில் சித்தாந்த விளக்கம் கொடுக்க முனைந்தார்கள். அவரை வழிபடுவதே கன்ம மலங்களை ஒழித்து இன்ப நெறி கானும் வழியென்று போதித்தார்கள்.

ஆனால் கடவுள் வழிபாட்டில் மடத் தலைவர் வழியில் இராமலிங்கர் செல்லவில்லை. பேதமின்றி மனிதர் மீது அன்பு செய்கின்றவர்கள் உள்ளமே நடராஜர் ஆடுகின்ற அரங்கம் என்று பாடுகிறார். ‘மனிதனே நடமாடும் கோயில்’ என்ற விவேகானந்தரின் பேச்சோடு இராமலிங்கரின் இப்பாடலை ஒப்பிடலாம்.

‘எத்துணையும் பேத முறாது
எவ்வுயிரும் தம் முயிர் போல் எண்ணியுள்ளே,
ஒத்துரிமை யுரியவராய் உவக்
கின்றார் யாவர் அவருளந்தான்
சித்துருவாய் எம் பெருமான் நடம்
புரியுமிட மென நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக் கேவல்
புரித்திட வென் சிந்தை மிக விழைந்த தாலோ’
 

99