பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவை அனைத்திலும், அல்லி ஏற்றம் பெறுகின்றாள். அல்லியைப் பற்றிய கதைகள், செவி வழியாகப் பல வழங்கியிருக்க வேண்டும். அவற்றிலிருந்து சிலவற்றைத் தொகுத்துப் பிற்காலப் பாடகர்கள், நாட்டுப் பாடல்களாக எழுதிவைத்திருக்க வேண்டும். இக்கதைகளில் மகா பாரத கதா பாத்திரங்கள் இடம் பெறுகின்றனர் என்றாலும், கதையின் கருத்துக்கள் பழந்தமிழ்நாட்டில் நிலவியவைதாம்.

இவற்றைப் போன்று பாரதத்தோடு தொடர்புடைய கதைகள் சில நாட்டுப்பாடல் வடிவத்தில் வழங்கி வருகின்றன. அவை இக்கதாபாத்திரங்களின் தன்மைகளில் எவற்றை மக்கள் விரும்புகின்றார்கள். எவற்றை வெறுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. புராணக் கதா பாத்திரங்களைவிட தமிழ் நாட்டுக் கற்பனைக் கதா பாத்திரங்களுக்கே இப்பாடல்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு கதைப் பாடல்களிலும், அல்லி ஒரு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்கிறாள். புராணக் கதா பாத்திரங்களும் கதையில் உரிய இடம் பெறுகின்றன. ஆனால் புராணக் கதா பாத்திரங்கள் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றபடி தன்மை மாறி உருவாக்கப்பட்டுள்ளன.

125