பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடும். பல்லவர் காலத்திற்குப் பின் ஏராளமான கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அவையாவும் பெயர்த்து எழுதப்பட்டால் வரலாற்றின் அடிப்படை செம்மையாக அமையும். காசுகள், பழம் பொருள்கள் முதலியவை பற்றிய ஆராய்ச்சி இனிதான் தொடங்க வேண்டும். அவை மேற்கொள்ளப்பட்டால் சரித்திரத்தைப் பற்றிய புதிய உண்மைகள் வெளியாகும். தமிழ் நாட்டுப் பண்டைய நகரங்கள் இருந்து மறைந்து போன இடங்கள் அகழ்ந்து ஆராயப்பட்டால், புதிய புதிய உண்மைகள் வெளியாகும்.

இவ்வாறு கிடைக்கும்.ஆதாரங்களின் சமுதாய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு வரலாறு எழுதப்பட வேண்டும். மலையிலும் கடற்கரையிலும் சிறு குடியாக வாழ்ந்த தமிழன், தனது உழைப்பினால் உற்பத்திச் சக்திகளை வளர்த்து முன்னேறி, முல்லை நிலத்திலும், மருதத்திலும் பெருவாழ்வடைந்து பேரரசுகளை நிறுவி, பல்வேறு நாட்டு மக்களோடு நேசப்பான்மையோடும், போர் புரிந்தும் எவ்வாறு வாழ்ந்தான் என்பதை சமூக வளர்ச்சி அடிப்படையில் அன்றி எழுத முடியாது. இது போலவே பிற இன மக்களும், படிப்படியாக வளர்ச்சி பெற்றனர். இந்தியாவில் வளர்ச்சி பெற்ற பல இனங்களைச் சேர்ந்த மக்கள் வாணிபத்தின் மூலம், அறிவுத் தேட்டத்தின் மூலம் நிலப்பிரபுத்துவப் போர் வெறியர் துண்டுதலாலும், சிற்சில வேளைகள் நேச உறவோடும், சிற்சில வேளைகள் போரின் மூலமாகவும் தொடர்பு பெற்றனர்.

இவற்றால் சமூக வளர்ச்சிகள் சிக்கலடைந்தன. பண்பாட்டுக் கலப்புகள் ஏற்பட்டன. சமுதாய மாறுதலுக்கேற்ற வகையில் பண்பாட்டு மாறுதல்களும் நிகழ்ந்துள்ளன.

ஒரு இன மக்களின் பண்பாட்டில் வளர்ச்சியுறும் அம்சங்களும் உண்டு தேய்வுறும் அம்சங்களும் உண்டு. பண்பாட்டுக் கலப்பு நிகழும் போது சூழ்நிலை, இரு பண்பாடுகளின் பக்குவ நிலை பொறுத்து பண்பாட்டு அம்சங்கள் சில இணையும், சில அம்சங்கள் இணையா,

இதை மனத்துட் கொண்டு தமிழர் சமுதாய வளர்ச்சிப் போக்கை உண்மையாகச் சித்தரிக்கும் வரலாறு எழுதப்பட வேண்டும். இனக்


38