பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மண்டினி மருங்கில்
தண் தமிழ் வரைப்பில்
செந்தமிழ் கொடுந்தமிழ்
என்றிரு பகுதியில்’

இனி, 7-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் இப்பிணைப்பு இறுகி வந்ததென்றே சொல்லலாம். ஆழ்வார், நாயன்மார்களது பக்திப்பாடல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவின. தமிழிசை வளமடைந்தது. கடவுளைத் தமிழாசானாக சமயக் குரவர்கள் பாடினர். பக்திப் பாடல்களில் தமிழுணர்வும் கலந்தன. பக்தி வெள்ளத்தோடு தமிழுணர்வும் வெள்ளமாகப் பாய்ந்தது. இக்கால முடிவில் கம்பன் தோன்றினான். வால்மீகியின் காவியத்தைத் தமிழ்க் காவியமாக்கினான். அவனும் தமிழுணர்வை வளர்த்தான். நாட்டுப் பற்றையும் வளர்த்தான். இராமனைத் ‘தென்மொழி கடந்தான். வடமொழிக் கெல்லை தீர்ந்தான்’ என்று அழைக்கிறான். ‘தமிழெனும் அளப்பரும் சலதி’ என்று தமிழைக் கடக்க முடியாத கடலுக்கு ஒப்பிடுகிறான். தமிழ் நாட்டிற்கு தேவர் நாடு ஒப்பாகாது என்று காரணத்தோடு கூறுகிறான்.

‘அத்திருத்தகு நாட்டினை அண்டர் நாடு
ஒத்திருக்கு மென்றால் அது ஒக்குமோ
எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்?’

கம்பனையடுத்துள்ள பிரபந்த காலத்திலும் தேவர்களையும், மன்னரையும் பாடிய கவிகள் தமிழுணர்வை மறக்கவில்லை, வேதங்கள் முறையிட, தமிழின் பின் சென்றவன் திருமால் என்று குமர குருபரர் கூறுகிறார்.

‘அருமறைகள் முறைவிட
பைத் தமிழ்ப் பின் சென்ற
பச்சைப் பசுங் கொண்டலே.’


53