பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்திணை மக்களுக்கும் வேறு வேறான ஒழுக்கத்தை, யாவருக்கும் ஒத்த மரபான ஒழுக்கமாக உயர்த்த நடந்த முயற்சியைச் சிலப்பதிகாரம் வரவேற்றுப் போற்றுகிறது. இந்த ஒற்றுமை இயக்கத்துக்கு காவிய முறையில் வாழ்த்துக் கூறுகிறது. ஐவகை நிலங்களிலுமுள்ள கலையை ஒன்றுபடுத்த முயலுகிறது.

ஐவகை நிலங்களில் முளைத்தெழுந்த ஆடல் பாடல்களை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு அவர்கள் ஆக்கமளித்தனர். தமிழ் நாடு முழுவதற்கும் ஒரே கலையை, பல்வேறு வேறுபாடுகளையும் உள்ளடக்கி, உருவாக்கும் முயற்சியை வரவேற்றனர்.

வரலாற்றில் மிகச் சிறந்த, ஒரு கால கட்டத்தின் கண்ணாடியாக வாழ்க்கையின் பிரதிபலிப்பாக வாழ்க்கையை முன்னேற்றமான முறையில் மாற்ற முயலும் முயற்சிகளின் கலையுருவமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. இப்படித்தான் காவியம் அமைந்திருக்கிறது என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

ஐந்திணை மக்களது வாழ்க்கையிலிருந்து ஒழுக்கம் தோன்றுகிறது. அதனை அகம் புறம் என்று பிரித்து இலக்கியம் அமைக்கிறது. இவ்வொழுக்கத்தின் வழிப்பட்டதே ஆடல், பாடல் பாணி, அரங்கு விலக்கு வரி குரவை என்ற கலைகளனைத்தும், இவையனைத்தையும் தான் பண்பாடு என்று கூறுகிறோம். தமிழ் நாட்டின் பண்பாட்டை மலையைக் கண்ணாடியில் காண்பது போல இக்காவியம் காட்டுகிறது. மணிமேகலை என்ற காவியம் இதே பண்பாட்டைத் தொடர்ந்து விளங்குகிறது. இக்காவியத்தின் நோக்கம் பற்றி இளங்கோவடிகளின் கருத்து இதுதான்.

‘ஆடி நன்நிழலின் நீடிருங் குன்றம்
காட்டுவார் போற் கருத்து வெளிப் படுத்து
மணி மேகலை மேல் உரைப் பொருள்
முற்றிய சிலப் பதிகாரம் முற்றும்.’

இப்பொது நோக்கம் நிறைவேறக் காவியத் தலைவி கண்ணகி கருவியாகிறாள். புகார் காண்டத்தில் பெருங்குடி வணிகரின் செல்வச் சிறப்புக் கூறப்படுகிறது.


93