பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

தமிழர் வரலாறு

ஒரிடத்தில் வழங்கும் மொழி, ஏனைய இடங்களில் வழங்கும் மொழிகளைப் போலவே, சிறந்ததும் ஆம், அல்லது சிறப்பற்றதும் ஆம், ஆதலாலும், இலக்கியத்தமிழ். முதன் முதலில், பாண்டி நாட்டில் மேற்கொள்ளப்பட்டது ஆதலாலும், அவ்விலக்கியத் தமிழ், பிற நாடுகளில் பாக்களில் மேற்கொள்ளப்பட்டபோது, ஆங்கு வழக்கிலிருந்த, அந்நிலத்துக்குரிய சொற்கள் சில, அப்பாக்களில் இடம் பெற்றன ஆதலாலும், தமிழ்நாடு, இவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது கொண்டு, பொதுவாகக் கருதப்படுவது போல, பாண்டிய நாட்டில் வழங்கிய தமிழ், ஏனைய பன்னிரு நாடுகளில் வழங்கிய தமிழைவிட உயர்ந்தது என்பது பொருளாகாது.

தொடக்ககாலப் பாக்கள் அனைத்தும் அழிந்துவிட்டன :

இப்போது வழக்கில் உள்ள பழைய செய்யுட்களின் பண்பாகிவிட்ட, திருந்திய இலக்கண இலக்கிய மரபுகள் எல்லாம் இடம் பெறுவதற்கு முன்பே, எண்ணற்ற பாக்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும். நான் அடிக்கடி, மேற்கோள் காட்டும் அந்த ஐந்திணைப்பாக்களில், ஒவ்வொரு திணைப்பாட்டும்; அந்தத்தத் திணைக்கே உரிய நிலந்தில், ஒரு நிலத்திலிருந்து ஒரு நிலத்திற்கிடையே நிகழ்ந்த மக்கள் குடிபெயர்ச்சி அவ்வந் நிலத்துப் பழங்குடி மக்களின் சிறப்புப் பண்பாடுகளைத் தடம் தெரியாவாறு அறவே அழித்து விட்டு, பண்பாட்டுக் கலை வளர்ச்சியில், சுற்றுச்சூழல் செலுத்தும். ஆதிக்கத்தை மூடி மறைத்துவிட்ட ஏற்றத்தாழ்வற்ற ஒரே நிலையில் நடைபோடும் நவ நாகரீக வாழ்க்கையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர், பிறந்தனவாதல் வேண்டும். இவ்வகைப் பழம் பாடல்கள் அனைத்தும், இப்போது அழிந்துவிட்டன. (நனி மிகப் பழம் பாடல்களின் மாதிரிகளாக, இப்போது நாம் பெற்றிருக்கும் பாக்களுக்குக், கிறிஸ்துவ ஆண்டின் தொடக்கத்திற்கு மிக மிக முற்பட்ட காலத்தை வகுக்க இயலாது.) அப்பழைய இலக்கியங்களெல்வாம் ஏன் மறையலாயின? ஹாரப்பா மொகஞ்சோதாரோக்களில் நிகழ்ந்த அண்மைக்கால அகழ்