பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

275


அதை, அம்மக்களின் பழக்க வழக்கங்களே வழங்கிவிட்டன. ஏதேனும் ஒர் இடையூறு ஒரு வழக்கு ஏற்பட்டுவிட்டால், ஊர்ப்பெரியவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்றும் செய்வதுபோல், ஊர்நடுவே நிற்கும் மரத்தடியில், பொதுவாக, ஆலமரத்தடியில் கூடியிருந்து, ஒரு கலயம் கள்ளுக்கு, அவ்வழக்கினைத் தீர்த்துவிடுவர். அத்தகு மரங்களின் அடியில் இருக்கும் திறந்தவெளி, பொதியில். பொதியம், பொதுவில், மன்று, மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படும். மன்றம், என்றால், பொதுவாக ஊர்ப்பொதுவிடம் எனப்படும். ஊர்க்கால்நடைகள் ஆங்கே மடக்கி வைக்கப்படும். கன்றுகளை அழைக்கும் அம்மா எனும் குரல் எழுப்பியவாறே மன்றில் புகுந்து நிறைந்துவிடும். (கன்றுபயிர் குரல மன்று நிறைபுகுதரும் (அகநானூறு : 14 : 11) இதே வரி, குறிஞ்சிப்பாட்டிலும், எவ்வித மாற்றமும் இன்றி இடம் பெற்றுளது. (குறிஞ்சிப்பாட்டு : 21.8) கால்நடைகள், வரிசை வரிசையாக மன்றுள் நுழைவதையும், கொல்லேறு எனும் காளைகள், அம்மன்றத்தில் திரிவதையும் புறநானூற்று வரிகள் உணர்த்துகின்றன. மன்று நிறையும் திரை’' (புறம் : 387 : 24), 'கொல்லேறு திரிதரு மன்றம்' (புறம் : 309 : 4) மரம் செடி கொடிகள் அற்ற, மேடுபள்ளம் இல்லாத திறந்த வெளிகளும், பொது நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கி வைக்கப்படும், அத்தகு இடங்களும் மன்றம் என அழைக்கப்படும். ஆங்கு மகளிர் செல்வதும், குரவை போலும் கூத்தாடுவதும் செய்வர். "மென்தோள் மகளிர் மன்றம் பேணார்’' (புறம் : 375 : 12) மன்று தொறும் நின்ற குரவை, (மதுரைக்காஞ்சி : 615) பெரியாழ்வார் திருமொழி, மன்றில் குரவை ஆடிய திருமாலைக் குறிப்பிடுகிறது. மன்றில் குரவை பிணைந்த மால் (11 2 :2 : 1.2)

இதுபோலும் திறந்த வெளிகளில், அவ்வந் நிலத்துக்கே உரிய மரங்கள் வளர்க்கப்படும். பாண்டியர்க்கு உரிய மன்றத்தில், வேம்பு வளர்க்கப்பட்டு, தங்கள் தலைமாலைக்கு வேண்டும் தழை அம்மரத்திலிருந்து கொய்யப்படும். பாண்டியன் நெடுஞ்செழியன் ஊர்மன்றத்தே இருக்கும்