பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழர் வரலாறு


மருதத்தில், மண்ணின் விளைவாற்றல், அம் மண்ணுக்குரியவனாம் உழவனுக்கு நிலத்தை உழுத பின்னர், நெல், முதலாம் உணவுப்பொருட்களை விளைவிக்கும் முறையினைக் கற்றுத்தந்தது. ஆறுகளின் இரு பக்கங்களிலும், படிப்படியாகத் தாழ்ந்து செல்லும் நில அமைப்பு, தங்கள் விளை நிலங்களுக்கு உயிர் ஊட்டும் நீரைக் கொண்டு செல்லும் முறையினை, வெள்ளத்தை, அது விரும்புமாறு ஒடவிடாது, தாம் விரும்புமாறு கொண்டுசென்று, வெள்ளநீரை ஆட்சி கொள்ளவல்லராகிய வெள்ளாளர்க்குக் கற்றுத் தந்தது. மழைநீரை ஏரி, குளங்களில் தேக்கி வைத்துப், பாசனக் கால்வாய்கள்மூலம் தங்கள் விளை நிலங்களுக்குச் செலுத்தவும், கிணறுகளிலிருந்தும், நீர் ஊறும் கசங்களிலிருந்தும் நீரேற்று வான் மூலம் நீரை மேலே கொணர்ந்து, தாங்கள் பயிரிடும் நிலத்துண்டுகளுக்குப் பாசனம் அளிக்கவும் வல்லவரும், பெய் எனக் கூறும்போது பெய்யுமாறு கார்மேகங்கள் மீது ஆட்சி செலுத்தவல்லவருமாகிய காராளர் ஆற்றுப்படுகைக்கு அப்பாற்பட்ட மேட்டுப்பகுதிகளில் வாழ்ந்திருந்தனர். தென்னிந்திய உழவர் பெருமக்களின் உழவு பற்றிய மதி நலத்திற்கு, இன்றைய விஞ்ஞானம், ஒரு சிறிதே துணைபுரிய வல்லதாம் என்பதற்கேற்ப, உழவுத்தொழில் பற்றிய கலைகள், நனிமிகப் பழங்காலத்திலேயே முழுமை பெற்று விட்டன. ஆற்றுப்படுகைக்கு அப்பால் வெள்ளத்தால் அரிப்புண்டு அடித்துக்கொண்டுவரப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மண்ணும், தண்டகன் பெயர்பெறும் காட்டின் அழிந்த புல்பூண்டுகளின் கூளமும் கலந்த கலவையாம் நிலப்பகுதி, ஆற்றுப்படுகைக்கு அப்பால் கிடந்தது. இந்நிலப்பகுதிதான், பருத்திச்செடியின் பிறப்பிடம். புதிய கற்காலத்து மனிதன், பருத்தியை நூலாக நூற்கவும், அந்நூலை ஆடையாக நெய்யவும் கற்றுக்கொண்டான்.

தம்முடைய தேவைக்குமேல் குவிந்துவிட்ட உணவுப் பொருட்களையும், பருத்தி ஆடைகளையும் சேர்த்து வைக்க, மாந்தர், மரத்தாலான வீடுகளை, இப்போது கட்டத் தொடங்கினர். தேவைக்குமேல் குவிந்துவிட்ட பொருட்களை