பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தமிழர் வரலாறு

ஓசை ஒழுங்குடையதாகவும் இருக்கலாம். ஓசை ஒழுங்கற்றதாகவும் இருக்கலாம். பெரும்பாலோர் கருதுவதுபோல், உரைநடை செய்யுள் நடையை முந்தியதா அல்லது பெரும்பாலும் அதுவே உண்மை நிலையாதல் பாதி ஓசையொழுங்குடையதாகவும், பாதி ஓசையொழுங்கற்றதாகவும் கலந்து இருந்த மூலமுதல் உரையாடலின், பிற்பட்ட காலத்து இரு வேறுபட்ட நிலைகள்தாமா, உரைநடையும், செய்யுளும் என்பதைத் துணிந்து முடிவு கூறுவது, அத்துணை எளிதன்று; ஆனால் இலக்கிய வளர்ச்சியில், செய்யுள் நடை உரைநடையை மிகப்பழங்காலத்திலிருந்தே முந்தியுளது என்பது முற்றிலும் உண்மையாம். “பண்”, “பாண்” என்ற இரு சொற்களும் (அவற்றிலிருத்து “பாடு”-வினைச்சொல் ; “பாட்டு” -பெயர்ச்சொல்) தமிழின் மிகப் பழைய மொழி நிலைக்கு உரியவாகித், தமிழர்களின் தொடக்க காலத்து இன்பப் பொழுதுபோக்குகளில், இசை வழங்கலும் ஒன்று என்பதை உறுதி செய்கின்றன. தொடக்கத்தில், இசை வாணர்களாகவும், பின்னர்க் கால்நடை வளர்ப்பு, நாகரீகப் பருவத்தில், அரசு நிலை இடங்கொண்டபோது, அரசவைக் கலைஞர்களாகவும், அரசன் புகழ் பாடுபவராகவும், வாழ்ந்த பாணர், தமிழர்களில், மிகப் பழைய, நன்கு பாராட்டப் பெற்ற, ஆனால் சிறிய அளவிலேயே பரிசு அளிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்தி வந்தனர். தூய தனித்தமிழ் நாகரீகம் சிறந்து விளங்கியபோது, அப்பழங்காலப் பாணர், அரசர்களின் நண்பர்களாகவும், அவர்களுக்கு அறிவுரை வழங்குவோர்களாகவும் விளங்கினர். ஆனால், வடஇந்தியாவிலிருந்து வந்த ஆரிய நாகரீகம், தென்னிந்திய நாகரீகத்தோடு கலந்துவிட்ட வரலாற்றுக்காலத்தில், இறைச்சியை அதிலும் மாட்டிறைச்சியை அளவுக்கு மீறி உண்பதிலும், வெறியூட்டு மதுவகைகளைக் குடிப்பதிலும், அப்பாணர்கள் கொண்டுவிட்ட இடையறவுபடாத் தீயொழுக்கம், தென் இந்தியாவில் மிகவும் தீண்டத்தகாத, இழிந்த இனத்தவருள் ஒருவராம் சமுதாய இழிநிலையை அவர்க்குத் தந்துவிட்டது.