பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சிபுர மாவட்டம்

539

“பான்-கெள” என்ற சீன எழுத்தாளன் கூறியதை, முதல்பத்தியில் எடுத்துக் காட்டிய திருவாளர் நீலகண்டி சாஸ்திரியார் அவர்கள், இரண்டாவது பத்தியில், “டெளங்-பாவோ” (Towng-pao)என்ற நூலில், திருவாளர் பால்பெல்வியோட் அவர்கள், “ஹெளஆங்-டெக்” (Hawang-teche) என்ற தொடருக்குப், பல்வேறு வரலாற்றுப் பேராசிரியர்கள் அளிக்கும் விளக்கங்களையெல்லாம் மறுத்துவிட்டு, “ஹன்” (Han) காலத்துச் சீனமொழி ஒலியியல் கூற்றுப்படி, “ஹெள ஆங்-டெக்” என்பதற்குக் “காஞ்சி” என்பதே ஏற்புடைய இணையாம்' எனத் திருவாளர் பெர்ரன்ட் (Ferrand) என்பார் கூறும் விளக்கத்தையும் எடுத்தாண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கி, பி. 11ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு, சீனப்பேரரசுக்கு அனுப்பிய தூதுவர், சீனா சென்றடைய எட்டுத் திங்களை எடுத்துக் கொண்டுள்ளார் என்பதை எடுத்துக்காட்டுவதன் மூலம், கி. மு. இரண்டாம் நூற்றாண்டில், சீன யாத்திரிகன் ஒருவன், காஞ்சி வந்துசேர, 12 திங்களை எடுத்துக்கொள்ள நேர்ந்தது என்பது ஏற்கக் கூடியதே என்பதை வலியுறுத்தும், திருவாளர் பால் பெல்லி யோட், அவர்களின் வாதத்தையும் எடுத்து வைத்துள்ளார், திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் (பக்கம் : 45)

ஆக,மேலே கூறியிருப்பனவற்றையெல்லாம் எடுத்தாண்டிருப்பதன் மூலம், கி. மு. இரண்டாம் நூற்றாண்டு காலத்திலேயே காஞ்சிநாடு, “காஞ்சி” என்ற பெயரிலேயே இடம் பெற்றிருந்தது. சீன நாட்டிற்கு அரும்பொருட்களை அனுப்பும் வளம்மிக்க நாடாகவும் திகழ்ந்தது என்பதற்கான தம்முடைய ஒப்புதலைத், திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள், தந்துள்ளார் என்பது தெளிவாகிறது.

மேலும், சென்னைப் பல்கலைக் கழகத்தில், பண்டை வரலாறு மற்றும் தொல்பொருள் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்த திருவாளர். தே.வை.மகாலிங்கம் அவர்கள் 1963ல் ஆற்றிய ஆறு விரிவுரைகளின் தொகுப்பாக, 1968ல்