பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளந்திரையன் 95

இக்கடற்கரைப் பட்டினம், காவிரிப்பூம்பட்டினம் அளவு பெரிது அல்ல வாயினும், வாணிக வளங்கொழிக்கும் மையமாக இருந்தது. 'அதன் பெருமை மிக்க கடற்கரையில், பால்போலும் வெண்ணிற உடலும் ஆடிக்கொண்டே இருக்கும் வெள்ளிய பிடரி மயிரும் தலையாட்டத்தினையும் உடைய குதிரைகளோடு வடநாட்டு, வளங்கொழிக்கும் பொருட்களைக் கொண்டுவந்து தரும் மரக்கலங்கள் வரிசை வரிசையாக நிற்கும். மணல் பரந்த தெருவுகளில் பண்டகச் சாலைகளைக் காவலர் காத்துக் கிடப்பர்; வேறு வேறுபட்ட தெருக்களில், வானளாவ உயர்ந்த மாடமாளிகைகளில், வணிக மக்கள் வாழ்ந்திருப்பர்’.

‘நீர்ப்பெயற்று எல்லைப் போகிப், பால்கேழ் வால்உளைப் புரவியொடு, வடவளம் தரூஉம் நாவாய் சூழ்ந்த நனிநீர்ப் படப்பை, மாடம் ஓங்கிய மணல்மலி மறுகின் பரதர் மலிந்த பல்வேறு தெருவின் சிலதர் காக்கும் சேணுயர் வரைப்பு,’

- பெரும்பாண் : 319-324

அது வாணிக வளம் அல்லாமல், வேறுபல வளங்களையும் கொண்டது. “வீடுகளில், உணவுப் பண்டங்கள் மலிந்து கிடக்கும், நெல்விளைய உழும் எருதுகளும், பால்வளம் தந்து கொண்டே இருக்கும் நினைவால் காளைகளைக் கருதாக் கறவைகளும், ஆட்டுக்கிடாய்களும், காவல் நாய்களும் திரிந்து கொண்டிருக்கும். வளைத்து வளைத்துப் பண்ணப்பட்ட பொன் அணிகள் அணிந்த மகளிர், கொன்றை மரத்து, மலர்ந்து கிடக்கும் மெல்லிய கொம்புகளில், பனித்துளிகள் படர்ந்திருக்கும் காட்சிபோல பசிய மணிகள் கோத்த வடங்களால் ஆன அணிமேலேகிடந்து அணிசெய்ய, இடையில் கட்டிக் கொண்டிருக்கும் மெல்லிய ஆடை அசைய, பெரிய மலைச்சாரலில் மகிழ்ந்து ஆடும் மயிற் கூட்டம் போல் கால்களில் அணிந்திருக்கும் பொற்சிலம்பு ஒலிக்க, வானளாவ