பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளந்திரையன் 97

பாம்பனைப் பள்ளிமீது படுத் திருக்கும் விஷ்ணு வழிபாடு, தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் குறிப்பிடப்படுவது இதுவே, விஷ்ணுவின் இத்தெய்வத் திருமேனி, முதன்முதலில் கருத்தில் உருப்பெற்றது எப்போது என்பதை நாம் அறியோம். ஆனால், இந்தியாவில் நாம் பெற்றிருக்கும், அனந்தசாயிச் சிற்பங்கள், குப்தர் காலத்திற்கு முற்பட்டனவாகா:

திருவெஃகாவின் சோலைகளையும், நீரோடைகளையும் கடந்த பின்னர்க், காஞ்சி, அல்லது அச்சொல் தமிழாகி வழங்கும் கச்சிப் பெருநகரை அடையலாம். சோலைகளில், நிலம் நோக்கித் தொங்கும் துதிக்கைகளையுடைய யானைகளுக்காக, நெய்கலந்து ஆக்கிவைத்திருக்கும் சோற்றுக் கட்டிகளைக், களிறு ஓட்டும் கோல்களைக் கையில் கொண்டிருக்கும் யானைப்பாகர்கள், ஏமாறும் சமயம் பார்த்துக், கருவுற்றிருக்கும் மந்திகள் கவர்ந்து செல்லும்! அச்சோலைகளில், களிறுகளின் கடுஞ்சினத்தை அடக்கி வைக்க, அவற்றைப் பிணித்திருக்கும், வயிரம் பாய்ந்த வலிய கட்டுத்தறிகள் வரிசை வரிசையாக நடப்பட்டிருக்கும். நகரின் நீண்ட தெருக்கள், நெடிய பெரிய தேர்கள் ஓடிஓடிப் பண்ணிய குழிகளால் நிறைவுண்டிருக்கும். போர்க்களத்தில் படைக்கலம் இழந்து தோற்றுப்போதலை அறியாத, மிக்க வலியும் பெரிய புகழும் வாய்ந்த மறக்குடி மக்களைக் கொண்டிருக்கும், நகரைக் காத்து நிற்கும் நாற்படை; வாங்குவதும் விற்பதுமாகிய வாணிகத்தொழில், அவ்வணிகத் தொழில், அவ்வணிக வீதிகளில் இயங்குவாரை, எளிதே இயங்கவொட்டாது தடுக்குமளவு பெருக நடைபெறும்: அந்நகர்வாயில், பரிசில் வேண்டி வரும் இரவலர்க்கு அடைத்தல் அறியாது என்றும் திறந்தே கிடக்கும். காவற் காட்டால் அரண் செய்யப்பட்டிருக்கும் அந்நகர், நான் முகனைப் பெற்ற நீலவண்ண நெடியோனாம் திருமாலின் திருவுந்தியிலிருந்து எழும், பல்லிதழ்த் தாமரை மலரின் நடுவண் கொட்டை போலப், பேரழகுப் பெட்டகமாய்க் காட்சி அளிக்கும். நகரைச் சுற்றி, உயர்ந்த மதில்கள்

த.வ II-