பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

125


தில்லை. புலமைத் துறையில், தம்மோடு மாறுபட்டு வருவார், தோற்று காணும் வண்ணம், அவரைத் தம் புலமைபால் வென்று, தலைநிமிர்ந்து நின்று செருக்குற்று வாழ்வதல்லது, வேறு மாறுபாடு அறியா அந்நிலையால், சிறந்த புகழும், நாடாளும் நலமும் நன்கு வாய்க்கப் பெற்ற நின் தலைமைக்கு நிகரான தலைமையையும் உடையராவர்."

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்,
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி,
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை,
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்றே: திறப்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்கினிது ஒழுகின் அல்லது ஓங்குபுகழ்
மண்ணாள் செல்வம் எய்திய

நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.
-புறம் : 1.

இச்செய்யுளுக்கு இணைத்திருக்கும் கொளு இவ்வாறு கூறுகிறது :- "சோழன் நலங்கிள்ளியுழை நின்று, உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனைக், காரியாற்று, துஞ்சிய நெடுங்கிள்ளி" ஒற்றுவந்தான் என்று கொல்ல புக்குழிக், கோவூர் கிழார் பாடி உய்யக் கொண்டது." ஒற்றி வந்த நிகழ்ச்சியை மறைமுகமாகவாவது குறிப்பிட, மூலத்தில் எதுவும் இல்லை என்ற தடை ஒருபுறம் இருக்க, கோவூர் கிழார், நெடுங்கிள்ளியின் பகைவர்கள்பால், அதாவது நலங்கிள்ளி, கிள்ளிவளவன்கள் பால் மிக்க செல்வாக்குடையவராவர். ஆகவே, அவருக்கு, நெடுங்கிள்ளிபால் எவ்வித செல்வாக்கும் இருந்திருக்க முடியாது என்ற மேலும் ஒரு தடையும் உளது.{{Nop}}