பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டிய அரசர்கள்

175


உடலரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை,
நிலை திரிபு எறியத் திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல்! செழிய!
முலைபொலி ஆகம் உருப்ப நூறி,
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர
அவிர்அறல் கடுக்கும் அம்மென்

குவைஇருங் கூந்தல் கொய்தல் கண்டே';
-புறம் : 25.

இம்போருக்குப் பிறகு (கூடற் பறந்தலைப்போர்) வென்ற பாண்டியன். குறுநிலத்தலைவர் ஐவர் படைத்துணை பெற்றுத் தலையாலங்கானம் எனும் இடத்தில் பாடிகொண்டிருந்த பகைவரைத் தொடர்ந்து சென்று தாக்கினான். பகைவர் எழுவரையும், பாண்டியன் வெற்றி கொண்டான். சேர, சோழ வேந்தர்களோடு, அக்களத்தில் தோல்வி கண்ட் குறுநிலைத்தலைவர் ஐவரின் பெயர்கள், அப்போர் நிகழ்ச்சிக்குப் பிறகு பாடப்பட்ட அகநானூற்றுப் பாடல் ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளன. "பிடரிமயிர் கொய்யப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்டு, வெற்றிக்கொடி பறக்கும் தேரினையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன், தலையாலங்கானம் எனும் இடத்தில் நடைபெற்ற போர்க்களம், பகைவர் குருதி வெள்ளத்தால் செந்நிறம் பெற, சேரன், சோழன், சினம் மிக்க திதியன், போரில் வல்ல யானைகளைக் கொண்ட, பொன் அணிகள் பூண்ட எழினி, பன்னாடையால் அரித்து எடுக்கப்பெறும் கள்ளால் களிப்புறும் எருமையூரன், மாலை மலர்களின் தேன் மணக்கும் மார்பில் பூசிப்புலர்ந்த சாந்தினையுடைய இருங்கோவேண்மான், இலக்கண வகையில் இயற்றப்பட்ட தேரினைக் கொண்ட பொருநன் என்ற இவ்வேழரசர்களின், அதுகாறும் அவர்கள் பெற்றிருந்த வெற்றிப் புகழெல்லாம் அழிந்துபோக, ஒரே பகலில், அவர்களின் போர்