பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டிய அரசர்கள்

197


பொருள் உரைக் கூற்றோடு பொருந்தியுளது. அங்ஙனமாயின், இப்போது, நாம் பெற்றிருக்கும் அகநானூற்றில் உள்ள ஒவ்வொரு பாட்டும், காலத்தால், உக்கிரப் பெருவழுதிக்கு முந்தியது என்பது பொருளாகாது, தற்காலிக முதல் தொகுப்பு அவன் காலத்தில் செய்யப்பட்டது: அத்தொகை நூல், நானுாறு என்ற முழு எண்ணைப் பெறும் வரை அது, பிற்காலத்தே பெருகியிருக்க வேண்டும். உக்கிரபாண்டியன், கடைசி பாண்டியனாக, அகப்பொருள் உரையாசிரியரால் குறிப்பிடப்பட்டிருப்பது, தமிழகத்துச் சிறந்த வரலாற்றின் பெரும்பகுதியை மறைந்துவிட்ட ஒரு பேரழிவு தமிழகத்தை மேற்கொண்டு விட்டது என்பதைக் குறிப்பிடுவதாம். அயபேரழிவு என்ன என்பது, பின்வரும் அதிகாரம் ஒன்றில் விவாதிக்கப்படும்.

இவ்வதிகாரத்தில் குறிப்பிட்ட அரசர்களே அல்லாமல், புறநானூற்றுக் கொளுக்கள், ஒவ்வொன்றும் பாண்டியர் என்னும் பொருளே உடையதான, செழியன் பஞ்சவன், தென்னவன், வழுதி, மாறன் மீனவன், கெளரியன் என்ற பட்டப் பெயர்களில், ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்டனவற்றையோ கொண்டுள்ள, வேறுசில அரசர்களையும் குறிப்பிடுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள்ளே என்ன உறவுடையர் என்பதைக் கண்டறிவது இயலாது; பாண்டியப் பேரரசன் தலைநகரில் இருந்து ஆட்சிபுரியும்போது, ஏனையோர், குறுநில மன்னர்களாக இருந்து ஆட்சி புரிவது இயல்புடையதே. பாண்டியர், ஆரியமயமாக்கப்பட்ட,பின்னர், அவர்கள், திங்களின் வழிவந்தவர். பாண்டியர் அரச குமாரி சித்ராங்கதா வழி பிறந்த அர்ச்சுனன் மகன், சித்ராங்கதாவின் தந்தைக்குப் பிறகு பாண்டியர் அரியணை ஏறினான். அதன் பின்னர், பாண்டவர்களைப் போலவே, பாண்டியரும் ஒரு காலத்தே ஐவர் ஆயினர் என்ற பழங்கதைகள் எழலாயின. அன்றுதொட்டு அவர்களுக்குப் பஞ்சவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. [வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பாண்டியன், புறநானூற்று செய்யுள் ஒன்றில், "பஞ்சவர் ஏறு" (ஐவருள் கொல்லேறு போன்றவன்) என அழைக்கப்பட்டான்.{{Nop}}