பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

377

அதில் கொலைக்களக்காட்சியையும், களத்தில் பாய்ந்து பெருகும் குருதி வெள்ளத்தையும் கண் முன் கொணர்ந்து காட்டியுள்ளார் புலவர். 2) ஐந்து நூல்கள், ஐங்குறு நாறு போல, அகத்திணைகள் குறித்துப் பாடியுள்ளன. இவ்விருவகை நூல்களும், பழைய தமிழ்க் காதல் வீரப்பாடல்களின் மரபு வழிப் பெருமையின் அழிவை எதிரொலிக்கும் பிரதிநிதிகள் ஆகின்றன. 3) ஏனைய பன்னிரண்டும், விடுவித்துக்கொள்ள இயலாவாறு ஒன்றோடொன்று பிணைந்து இருப்பனவாகிய ஒழுக்கம் பழக்க வழக்கங்களை எடுத்துக் கூறும் அறிவுரை நூல்களாம். இந்நூல்கள். அக்காலை, இந்தியா முழுவதும் பெருமளவில் செல்வாக்குப் பெற்றுவிட்ட, சமஸ்கிருத நீதி சாஸ்திரப் பாடல்களைப் பின்பற்றி எழுந்த போலிகளாம். ஆகவே, இந் நூல்கள், ஆரிய நாகரீகம், தென் இந்தியாவில், நன்கு காலூன்றிக் கொண்ட காலத்தைச் சேர்ந்தனவாம். இவற்றில் பெரும்பாலான நூல்கள், செய்யுள் வடிவில் இருப்பதினாலேயே பாடல்கள் என அழைக்கப் பெறும். பழந்தமிழ்ப் பாக்களின் செய்யுள் ஒளியுணர்வை அறவே இழந் திருந்தும், உலகப் பேரறிஞர்களுள் எவர் ஒருவரின் அறிவுரைகளாலும் வெற்றி கொள்ளமாட்டா நனிமிக உயர்ந்த நிலையிலான ஒழுக்க நெறிகளை வழங்குகின்றன; எளிதில் மனத்திற் கொண்டு, இளைஞர்கள் உள்ளத்தில் ஒழுக்க நிலை அறிவுரைகளைப் பதிய வைக்க விரும்பும் போதெல்லாம், எடுத்துக் கூறவல்ல பாவடிவில் அமைந்துள்ளனவாதலின், அவை விலை மதிக்க வொண்ணாதனவாகக் கொள்ளப் படுகின்றன. செய்யுளாகக் கவர்ச்சியறு நிலையிலும் கற்பனை செய்து பார்க்கவும் இயலாதவை.

திருக்குறள் :

ஐரோப்பிய இலக்கியப் பேராசிரியர்களின் இலத்தின், ஆங்கில மொழி பெயர்ப்புக்களால், திருக்குறள், உலக மக்களுக்கு நன்கு தெரிந்த நூலாகி விட்டது. இப்பேராசிரியர்கள், கிறித்துவ சமய விரிவுரையாளர்களாதலின், சில சொல்லில் பல பொருளை விளங்கக் கூறும், தனக்கே உரிய