பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

தமிழ் இன்பம்


கிழக்கு வெளுத்துவிட்டது. இதுவரை மேற்கு நோக்கிய முகங்களெல்லாம் இன்று கிழக்கு நோக்கி நிற்கின்றன. இன்னும் பதினைந்து திங்களில் நாமிருக்கும் நாட்டை நாமே ஆளப்போகின்றோம். இந்திய நாடு இந்தியர்களுக்குச் சொந்தமாகப் போகின்றது. அந்த முறையில் தமிழ்நாடு தமிழருக்கே ஆகும் என்பதில் தடையும் உண்டோ? தமிழ்நாடு தன்னரசு பெறும் என்று எண்ணும்பொழுது தமிழர் உள்ளம் தழைக்கின்றது; தொண்டர் உள்ளம் துள்ளுகின்றது. தமிழ்த்தாய், முன்னாளில் எய்தியிருந்த ஏற்றமும் தோற்றமும் அலை அலையாக மனத்திலே எழுகின்றன.

சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று குலத் தமிழ் மன்னர், நித்தம் தமிழ்வளர்த்த நீர்மை நம் நினைவிற்கு வருகின்றது. சேரநாட்டு மாளிகையில், மெல்லிய வீரமஞ்சத்தில் கண்ணுறங்கும் தமிழறிஞர் ஒருவருக்குக் கவரி வீசி நிற்கும் காவலனை மனக் கண்ணெதிரே காண்கின்றோம். சோழ நாட்டு மாநில மன்னன், தமிழ்த்தாயின் திருவடி தொழுது, 'நான் பண்டித சோழன்' என்று இறுமாந்து பேசும் இனிய வாசகத்தைக் கேட்கின்றோம். சங்கத் தமிழ் மணக்கும் மதுரையில் அரியாசனத்தில் அமர்ந்து, ஆசிரியரின் சிறப்பையும், அவர்களை ஆதரித்தற்குரிய முறையையும் அழகிய பாட்டால் எடுத்துரைக்கும் பாண்டியனைப் பார்க்கின்றோம். "உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே" என்று பாண்டியன் அன்று பிறப்பித்த ஆணை என்றென்றும் தமிழ்நாட்டில் நின்று நிலவுதல் வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.