பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தமிழ் இன்பம்


{{gap}இள நலம் வாய்ந்த முருகன் விம்மித் தேம்பி அழுவதைக் கண்டு ஆற்றாத முனிவர் ஒருவர் அவ்விடம் விரைந்து போந்து, வெள்ளை மதியில் ஊன்றிய பிள்ளையின் கருத்தை மாற்றப் பலவாறு முயன்றார்; ஆயினும், அப்பிள்ளையின் கண்ணும் கருத்தும் பிற பொருளிற் செல்லாப் பெற்றி கண்டு விண்மதிக்கு நன்மதி புகட்டலுற்றார். "வெண்ணிலா வீசும் விண்மதியே! முருகனைப் போலவே நீயும் அமுதமயமாய் விளங்குகின்றாய்; கண்டோர் கண்ணையும் மனத்தையும் குளிர்விக்கின்றாய்; குமுதவாய் திறந்து குளிரொளி விரிக்கின்றாய்; உயிராகிய பயிர் தழைக்க உயரிய அருள் சுரக்கின்றாய். இவ்வாறு பல கூறுகளில் முருகனை நிகர்க்கும் நீ அவனோடு விளையாட வா” என்று முனிவர் நயந்து அழைத்தார்.

இங்ஙனம் ஒப்புமை காட்டி உவந்தழைத்தும் இரங்காத மதியின் நிலை கண்டு வருந்தினான் குமரன். அது கண்ட முனிவர், மதியின் சிறுமை காட்டி இடித்துரைக்கத் தொடங்கினார்; "மாலை மதியே! சில கூறுகளில் நீ முருகனை ஒப்பாயாயினும் பல கூறுகளில் அவனுக்கு நீ நிகராகாய்; முக்கட் பெருமானாகிய முதல்வனுக்கு நீ ஒரு கண்ணாய் அமைந்தாய்! முருகனோ கண்மணியாயமைந்தான்; கலைகள் குறைந்தும் நிறைந்தும், நீ வேறுபடுகின்றாய். முருகனோ எஞ்ஞான்றும் கலை நிறைந்த இன்னொளியாய் இலங்குகின்றான். நீ புற இருளையே போக்க வல்லாய், முருகன் அக விருளையும் அகற்ற வல்லான். உலகில் நீ ஒருபால் ஒளிருங்கால் மற்றொருபால் ஒழிகின்றாய்; முருகனோ அங்கிங்கெனாதபடி எங்கும்