பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தமிழ் இன்பம்


நிற்கையில் அவ் வழியாக ஒர் இளைஞன் வந்து சேர்ந்தான்.

அவன், மரத்தருகே நின்ற இருவரையும் இனிது நோக்கி, "ஐயா! நீங்கள் இருவரும் அயலூரார் என்பதை அறிந்தேன். ஏனெனில், இவ்வூரார் எவரும் இப் பாழான பழுமரத்தைக் கண்ணெடுத்தும் பாரார்கள். இம்மரத்தில் எந்நாளும் இலைகளும் தழைகளும் இல்லாமையால் விலங்குகளும் இதனடியில் நில்லாமல் விலகிப் போகும்; கண்களைக் கவரும் வனப்பு வாய்ந்த இக்கனிகளும் நச்சுக் கனிகளாய் இருத்தலின், உண்டாரைக் கொன்றுவிடும். இம்மரத்தின் கொம்புகளை விறகாய் வெட்டி எரிப்பதற்கும் இதனிடம் அமைந்த முள் இடையூறாயிருக்கின்றது. இப்பாழ் மரம் கடுங் காற்றில் அகப்பட்டு முரிந்து வேரற்று விழவேண்டு மென்று இவ்வூரார் இறைவனை நாளும் வழிபடுகின்றார்கள். இம் மரம் என்று விழுமோ, அன்றே இவ்வூரார்க்கு நன்றாகும்" என்று அதன் தன்மையை விரிவாகக் கூறி முடித்தான்.

அதைக் கேட்ட அரசிளங்குமரன் முன்னே தங்கி இளைப்பாறிய மரத்தின் நலத்தையும், பின்னே கண்ட மரத்தின் கொடுமையையும் ஒப்புநோக்கி, நச்சு மரத்தில் அமைந்த நன்னிறக் கனிகள், பேதையர் கைப்பட்ட செல்வம்போல் பிறர்க்கு இடர் விளைப்பனவாகும் என்று எண்ணி வருந்தினான்.

"நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று”

என்னும் பொய்யா மொழியின் பொருளைத் தெளிந்தான்.