பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை இன்பம்

139


எவரையும் சென்றடைந்ததில்லை. இன்று கவியுலகத்தில் சக்கரவர்த்திப் பட்டம் பெறுவதற்குத் தங்களைத் தவிரத் தகுதியுடையவர் வேறு யார் உள்ளார்? தில்லைவாழ் அந்தணர் சந்நிதியில் தமிழ்ப் பெரும் புலவர்கள் முன்னிலையில் தங்களுக்கு அப்பட்டம் அளிக்கப்படல் வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் சிதம்பரத்தில் செய்வீர்களானால் அடியேன் கால்நோய் தீர்ந்துவந்து அக்காட்சியைக் கண்குளிரக் காண்பேன் என்றார்.

அடுக்குமொழிக் கூத்தர் சொல்லியது கவிராயருக்கு மிக்க பொருத்தமாகவே தோன்றிற்று. 'எல்லையற்ற பெருமையுடையது தில்லையம்பதி. சபைகளிற் சிறந்தது அங்குள்ள கனகசபை: அச்சபாநாதர் நிகரற்ற தலைவர். அப்படிப்பட்ட பொன்னம்பலத்திலே தில்லை வாழ் அந்தணர் சபையிலே, நான் பெறும் பட்டம் உலகம் உள்ளவரையும் அழியாததாகும்' என்று அவர் எண்ணினார்; உடனே சிதம்பரத்தை நோக்கி எழுந்தார்.

அங்கு வேதாந்த வியாகரண தர்க்க நியாய சிரோமணியாய் விளங்கிய சபாரஞ்சித தீட்சிதரிடம் கவிராயர் சென்று தம் ஆசையை வினயமாய்த் தெரிவித்தார். அவரும் கவிச் சக்கரவர்த்திப் பட்டம் கொடுக்கும் பெருமை தமக்குக் கிடைத்ததைக் குறித்து அடங்காத மகிழ்ச்சிகொண்டார். "சிதம்பரத்தில் ஆணித் திருமஞ்சன விழாவிற்கு அடுத்த நாள். ஆயிரக்கால் மண்டபத்தில் தோணிபுரித் தோன்றல் ஶ்ரீ பொன்னப்பக் கவிராயருக்குக் கவிச் சக்கரவர்த்திப் பட்டம் கொடுக்கப்படும்" என்று சபாரஞ்சித தீட்சிதர் ஆயிரம் பேருக்கு அறிக்கையும் அழைப்பும் அனுப்பினார்.