பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தமிழ் இன்பம்


வாழும் புலவர் மகிழ்ந்து போற்றுவது அருந்தமிழ் அமுதமேயென்றும், தெள்ளமுதுண்டு திளைத்த தேவர் மாறிலா இன்பத்தில், மகிழ்தல் போலச் செந்தமிழ் அமுதம் பருகிய புலவரும் செவ்விய, இன்பம் நுகர்ந்து செம்மாந்திருப்பர் என்றும் கவிஞர் அமைத்த உவமை செவிச் சுவையுடைய செல்வர்க்குச் சிறந்த இன்பம் தருவதாகும்.

இன்னும், 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்னும் கட்டுரைக் கிணங்க, கல்வியின் அருமையறிந்து ஆதரித்த இம்மன்னனது பெருமையை,

"மாணுறஎல் லாம்படித்த
மன்னன்முத்துச் சாமிவள்ளல்
ஆண்மைத் திறத்தில்மத
யானைகா ணம்மானை!
ஆண்மைத் திறத்தில்மத
யானையென்ட தாமாயின்
காணுமிவன் அங்கங்
கருமையோ அமமானை
கற்றவர்க்கங் கங்கருமை
காட்டுவான் அம்மானை"

என்று அம் மன்னனது அருமைக் குரியவராய் விளங்கிய கவிஞர் ஆர்வமுற எழுதியமைத்தார். இயலிசை நாடகமென்னும் முத்தமிழையும் முறையாகக் கற்ற நற்றமிழ்ச் செல்வனை, மானுற எல்லாம் படித்த மன்னன்” என்று கவிஞர் மனமாரப் புகழ்ந்தார்; அறிவும் ஆண்மையும் ஒருங்கே யமைந்த வள்ளலை விழுமிய வேழத்திற்கு உவமை கூறினார். வேழத்தின் மேனி கருமை காட்டும் என்றும், வள்ளல் கற்றவர்க்கு