பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தமிழ் இன்பம்


பெருஞ்செல்வமுற்று விளங்கிய குமணனைக் கண்டு அழுக்காறு கொண்டான் அவன் தம்பியாய இளங்குமணன், தமையன் ஆண்ட மலையையும் நாட்டையும் கவர்ந்துகொண்டு அவனைக் காட்டிற்கு ஒட்டினான், குமணனது தலையைக் கொய்து வருவார்க்குப் பரிசளிப்பதாகவும் பறையறைவித்தான். வள்ளலைக் காணாது காலைக் குமுதம்போல் குவிந்து வாடிய குடிகள், வன்கண்மை வாய்ந்த தம்பியின் செயல் கண்டு கண்ணர் உகுத்தார்கள்; குமணனது குலப்பெருமையை அழித்து, அதன் மணத்தை மாற்றத் தோன்றிய இளையோனை, "அமணன்" என்று அழைத்தார்கள். அமணன் ஆண்ட நாட்டின் அருகே வந்த ஆன்றோரும் அறவோரும், புலிகிடந்த புதர் கண்டாற் போன்று புறத்தே போயினர். முதிர மலைக் குடிகள் மனம் வாடி வருந்தினார்கள்.

நாட்டைவிட்டுச் சென்ற குமணன், காட்டில் விளைந்த காயும் கனியும் அயின்று, கானப் புல்லில் துயின்று காலங்கழித்தான். இவ்வாறிருக்கையில் ஒரு புலவர்,

"ஆனினம் கலித்த அதர்பல கடந்து,
மானினம் கலித்த மலையின் ஒழிய
மீனினம் கலித்த துறைபல நீந்தி"

குமணன் கரந்துறைந்த கானகம் போந்தார். அங்கு மரவுரி புனைந்து மாசடைந்த மேனியோடு திரிந்த வள்ளலைக் கண்டு, "ஐயனே! உண்பதற்கு ஒரு பிடி சோறுமின்றி என் மனையாள் வாடுகின்றாள். பசியால் மெலிந்த தாயிடம் பால் காணாத பாலன் தாய் முகம் நோக்கினான்; தாய் என் முகம் நோக்கினாள்; யான் உன் முகம் நோக்கி வந்தேன்"