பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VI. மொழியும் நெறியும்

26. தமிழும் சைவமும்*[1]

பாரத நாடு, என்றும் தெய்வ மணம் கமழும் திருநாடு. தெய்வம் உண்டு என்ற கொள்கை நினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலமாக இந்நாட்டில் நிலவி வந்துள்ளது. 'இவ்வுலகத்தைப் படைப்பது தெய்வம்: காப்பது தெய்வம்: அழிப்பதும் தெய்வம் என்னும் கருத்து பாரத நாட்டுப் பெருஞ் சமயங்களில் எல்லாம் காணப்படும். கருங்கச் சொல்லின், அவனன்றி ஒர் அணுவும் அசையாது' என்னும் உண்மையை அறிந்து போற்றும் நாடு இந்நாடு.

இத்தகைய தெய்வத்தைத் தமிழ் நாட்டார் பலவாறு போற்றினார்கள்; பல திருநாமங்களால் அழைத்தார்கள். நாளடைவில் அப் பெயர்கள் நூற்றுக் கணக்காகவும். ஆயிரக் கணக்காகவும் பெருகிவிட்டன. மாணிக்கவாசகர், திருவாசகத்தில் இதனைக் குறிக்கின்றார்.


  1. சென்னை வானொலி நிலையத்திற் பேசியது. அந்நிலையத்தார் இசைவு பெற்றுச் சேர்த்தது.