பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தமிழ் இன்பம்


கையோடு அவ்விருவரையும் காத்து நிற்க, அன்பு வடிவாய குகன், முறையாக மூவரையும் காத்து நின்றான். இரவு முழுவதும் கண்ணிமையாது காவல் செய்த குகன், இன்பப் பணியிலே ஈடுபட்டான். காளத்தி நாதனை இராப்பொழுதில் கண்ணிமையாது காத்துநின்ற கண்ணப்பனைப் போலவே இராமனைக் காத்து நின்றான் குகனும்.

இன்னும் காளத்தி வேடனது அன்பிற்கும் கங்கை வேடனது அன்பிற்கும் ஒரு சிறந்த ஒற்றுமையுண்டு. இருவரும் இறைவனிடம் பயன் கருதாப் பக்தி பூண்டவர்கள்; கூடும் அன்பினில் கும்பிடுதல் தம் கடன் என்று கொண்டவர்கள். இத்தகைய பக்தியே சாலச் சிறந்தது என்று சான்றோர் கூறுவர். இராமன் நாடு துறந்து காடு புகுந்த பின்னர், அவன்பால் அன்பு கொண்டவர் மூவர். கங்கைக் கரையிலே குகன் இராமனைச் சேர்ந்தான்; கிஷ்கிந்தையில் சுக்ரீவன் வந்து சேர்ந்தான்; இலங்கையில் விபீஷணன் வந்து அடைந்தான். தன்னை வந்தடைந்த மூவரையும் தன்னுடைய குடும்பத்திலே சேர்த்துக்கொண்டான் இராமன். எனினும், சுக்ரீவன் இராமனிடம் அன்பு பூண்டதற்குக் கைம்மாறாகக் கிஷ்கிந்தை அரசைப் பெற்றான். விபீஷணன் இராமனைச் சரணடைந்து இலங்கையரசைப் பெற்றான். குகன் ஒருவனே பக்திக்காகப் பக்தி செய்து கைம்மாறு கருதாத அன்பின் நீர்மையை நன்கு விளக்கிக் காட்டினான்.

இவ்வாறு கனிந்த அன்பு வாய்ந்த காளத்தி வேடனையும், கங்கை வேடனையும் குறிக்கோளாகக்