46
தமிழ் இன்பம்
பாடல்கள் பல உண்டு. தமிழ்நாட்டின் நல்லணியாகத் திகழும் காவேரி ஆற்றை இளங்கோவடிகள் இசைப் பாட்டால் புகழ்ந்து வாழ்த்தியுள்ளார்.
"பூவார் சோலை மயிலாகப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி "
என்ற இசைப் பாட்டைக் கேட்கும் பொழுது தமிழ்ச் செவிகளில் இன்பத் தேன் வந்து பாய்கின்றதன்றோ?
இவ்வாறு பாணர்களும் புலவர்களும் வளர்த்து வந்த தமிழிசையைச் சைவ சமய நாயன்மார்களும் வைணவ சமய ஆழ்வார்களும் பக்தி நெறியைப் பரப்புவதற்குப் பயன்படுத்தினார்கள். ஈசனைப் பாடிய தேவாரத் திருப்பாசுரங்கள், இறைவன் திருவருளை இன்னிசையால் எளிதிற் பெறலாம் என்னும் உண்மையை எடுத்துரைக்கின்றன. இன்னிசை பாடுவார் பெறும் பயனைத் திருஞானசம்பந்தர் குறித்துள்ளார்.
"பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்"
என்பது அவர் திருவாக்கு. 'இசைத் தமிழால் வழிபடும் அடியார்க்கு ஈசன் மண்ணுலக வாழ்வும் தருவான்; விண்ணுலக வாழ்வும் தருவான்' என்பது இப்பாட்டின் கருத்து. திருநாவுக்கரசர் என்னும் பெரியார் கடுமை யான சூலை நோயுற்றுத் துடிக்கும்பொழுது இறைவனை நினைந்து, "ஐயனே!"
"தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்”