பக்கம்:தமிழின எழுச்சி.pdf/122

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
வெட்கங்கெட்ட தமிழர்கள்!


என்னையும் சேர்த்துத்தான், மிகுந்த மனச்சலிப்புடன், என் உள்ளத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் இக் கருத்துகளை இங்கு எடுத்து எழுதத் தொடங்குகின்றேன். என்னால் இவற்றை எழுதாமல் இருக்க முடியவில்லை. எவ்வளவோ அமைவுற, எத்துணையோ நாள்கள் எண்ணிப்பார்த்து விட்டேன். இவற்றை எழுதும்போது எவர்எவர் முகமோ என் உள்ளத்திரையில் வந்து முகச்சுளிப்புக் காட்டுவதை என்னால் உணர முடிகிறது. இக்கருத்துகளைப் படித்தபின், இதுவரை எனக்குத் துணையாக இருக்கும் இரண்டொருவர் கூட, என்னை விட்டு விலகினாலும் விலகிவிடலாம் என்ற எண்ணமும், எனக்கு இடையிடையே வந்தது. இருந்தாலும் இப்படியொரு கருத்துரையை எழுதத் துணிந்து விட்டேன். எவரேனும் ஒருவர் தமிழனுக்கு எதிரணியில் இருந்து கொண்டு, பின்னொரு நாளில், என் தாய்த்தமிழ் இனத்தைப்பற்றி எழுதுவதைவிட ஏன் நமக்கு நாமே எழுதி விடக்கூடாது - என்று எண்ணிப் பார்த்தேன். அதன்பின், எழுதுவது எனக்குச் சரியாகவே பட்டது. உடனே, எவ்வகை எதிர்ப்பு வந்தாலும் எழுதி விடுவது என்று துணிந்து விட்டேன். எத்தனை நாளைக்குத்தான் நம் உடற்புண்ணின் நாற்றத்தை நாமே மூடி வைத்துக் கொண்டிருப்பது? கருவியிட்டாற்றுவார்; புண் வைத்து மூடார் பொதிந்து' என்ற பொன்மொழியை முன்வைத்து இதனை எழுதுகின்றேன். அன்பர்கள் இதனைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

என் இனத்திற்கு எப்படியும் விடிவு ஏற்பட வேண்டும் என்று நினைப்பவன் நான். எல்லா இனத்தைப் போலும், இந்தத் தமிழினமும்,