பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

வல்லிக்கண்ணன்


இருந்தன. அதனால் பிரக்ஞை இரண்டாவது இதழில் இது பற்றி ஆசிரியர் குறிப்பு எழுத நேரிட்டது :

“பிரக்ஞை முதல் இதழ் பெரும்பாலோரால் கசடதபற வுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. இதழின் முகப்பு திரு. கிருஷ்ணமூர்த்தியின் லினோ, The general get up. புதுக் கவிதைகள் போன்றவை கசட தபற வைப் பலருக்கு நினைவூட்டியது என்று எண்ணுகிறேன். எழுத்தாள நண்பர், கசடதபற காரர்கள் வெளியிட்டிருக்கும் மற்றொரு பத்திரிகை என்றெண்ணிச் சந்தா அனுப்பினேன் என்று கேலியாகச் சொன்னார். பத்திரிக்கையில், modern art, modern poetry போன்றவற்றறிற்கு இடமளித்தாலே automatic ஆக கசடதபற ஆகிவிடுகிறது என்று அர்த்தமில்லை. 'நடை’, ‘கசடதபற’ பத்திரிகைகள் நவீன ஓவியத்தைப் பிரகடனப்படுத்தியது உண்மைதான். ஆனால் நவீன ஓவியம், கதைகள் இவற்றுடன் பரிச்சயம் எங்களுக்கு முன்பே உண்டு. பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் சற்று தாமதமாகத் தோன்றியது ஒரு குற்றமாகாது என்று எண்ணுகிறேன்.”

மேலும் இரண்டு பாராக்கள் வளர்ந்துள்ள அறிவிப்பில் இங்கிலீஷ் வார்த்தைகளும் வரிகளும் அதிகமாகவே கலக்கப்பட்டிருக்கின்றன.

‘சிறு பத்திரிகைக்காரர்கள்' சிலரது இயல்பாகவே இந்தப் போக்கு வளர்ந்து வந்திருக்கிறது. தங்களை அறிவுஜீவிகள் (இன்டெலக்சுவல்ஸ்) என்று காட்டிக்கொள்ள விரும்புகிறவர்களின் போக்காகவும் இது காணப்படுகிறது. இவர்கள் தமிழும் இங்கிலீஷூம் கலந்தேதான் தங்களது சிந்தனைகள், உரையாடல்கள், கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பல்வேறு எழுத்துக்களையும் வெளியிடுகிறார்கள். விவாதங்கள் என்று வந்து விட்டால், இங்கிலீஷ் வார்த்தைகளும் வாக்கியங்களும் அளவுக்கு அதிகமாகவே கலந்து புரளும். தமிழில், தமிழ் வாசகர்களுக்காக எழுது கிறோம்-சிந்திக்கிறோம்-கருத்துக்களை வெளியிடுகிறோம் என்பதையே அவர்கள் மறந்துவிடுகிறார்கள். தங்கள் எண்ணங்களை இங்கிலீஷில் தான் நன்றாக வெளிப்படுத்த முடியும் என்பது அவர்களது கருத்தாக இருக்க வேண்டும் அல்லது தங்கள் கருத்துக்களைத் தமிழில் நன்றாக வெளியிடும் திறமை போதிய அளவு அவர்களுக்கு இல்லாதிருக்க வேண்டும். எப்படியோ தமிழையும் இங்கிலீஷையும் கலந்து கலந்தே எழுதுவதும் பேசுவதும் பெரும்பாலான அறிவுஜீவிகளின் பழக்கமாகி விட்டது.