பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18. வானம்பாடி


குறைந்த காலத்தில், அதிகமான கவனிப்பையும், சிறு பத்திரிகை வட்டாரத்தில் மிகுந்த பாதிப்பையும், கவிதை எழுதுவோரிடையே தீவிரமான தாக்கத்தையும் ஏற்படுத்திய சிறு பத்திரிகை 'வானம்பாடி' ஆகும்.

‘மானுடம் பாடும் வானம்பாடிகளின் விலையிலாக் கவிமடல்' என்று அறிவித்தவாறு, கோவையிலிருந்து வெளிவந்தது இச்சிற்றேடு, 1970 களில், மாதப் பத்திரிகையாக.

'கவிதை வானில் புதிய பறவைகள்', மானுடப் பூங்காவின் தேனெடுத்த தேனீக்கள், புதிய ராகங்கள் இசைக்கும் வானம்பாடிகளாய்க் கூடு திறந்து பாடி வருகின்றன' என்று வானம்பாடிக் கவிஞர்கள் கூறிக் கொண்டார்கள்.

'வானம்பாடி' கவிமடல், விகடன் அளவில், தனி அட்டை இன்றி, நல்ல தாளில், எளிமையான வசீகரத்துடன் அச்சாகி வந்தது. அதன் முதல் இதழில் கூடுகள் திறக்கின்றன என்ற மூன்று பக்கத் தலையங்கம், மகாகவி பாரதிக்கு அஞ்சலி செலுத்தியது.

‘அவன் விட்ட பயணத்தைத் தொடர வந்த பறவைகள் இன்று, தங்களைச் சுற்றிப் புகைப்படலங்களாகச் சுற்றிப் பிணைந்துள்ள சமூக வலைகளைத் தூக்கிக்கொண்டு, பறந்தபடி அவனுக்கு அஞ்சலிகள் செலுத்துகின்றன.

அந்த மானிடம் பாடிக் குவித்த கவிதைக் குயில், மற்றவர்களைப் போலவே மண்ணானாலும், அந்தக் கவியின் ஆத்மா, இந்தப் பரந்த மண்வெளிகளிலேயே, இத்தனை காலமும் யுகப் பசியோடு அலைந் திருக்கிறது.

அவனைப் போலவே இந்த மாநிலம் பயனுற வாழுதற்கு, சுடர்மிகு அறிவுடன் மானிடம் பாடும் வானம்பாடிகளாயினர்.

இந்தப் பறவைகளுள், பழமை என்கிற மண்ணில் காலூன்றி