பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

வல்லிக்கண்ணன்


இலக்கிய நோக்கு பற்றியும் விளக்கமாக எழுதிவிட்டு, முடிவாக இப்படிக் குறிப்பிட்டிருந்தார்கள்:

“ஒரே சமயத்தில் சமுதாயக் கண்ணோட்டமும், புத்திலக்கிய நோக்கும் கொண்ட-ஒரு கவிதை இயக்கம் எங்களுடையது. இந்த இயக்கத்தில் ஆர்வமும் ஆவேசமும் கொண்ட எவரும் பங்கு பெறலாம். நாங்களும் இந்த இயக்கத்தை வரவேற்கிற-மதிக்கிற- அறிவுபூர்வமாய் எதிர்க்கிறவர்களாயினும்கூட-அவர்களுடன் ஆரோக்கியமான உறவு கொள்ளத் தயங்க மாட்டோம்.

நாங்கள் மானிட சுதந்திரத்தை மதிக்கின்ற சுதந்திர மணிப் பறவைகள்.

பிரகடனம் செய்து கூடுகள் திறந்து புறப்பட்ட எமது சுதந்திரப் பறவைகளை மீண்டும் கூடுகளில்- அரசியல் கூண்டுகளில் அடைக்கா தீர்கள் !

ஏனெனில், அந்தக் கூடுகளே உலகங்கள் அல்ல. அந்தக் கூடுகளில் அடைந்து கிடக்க நாங்கள் சிறகு முளைக்காத குஞ்சுகளும் அல்ல. அதற்கும் மேலாக, எந்தக் கூட்டுக்கும் எங்களைத் தாங்கி நிற்கிற வலிமை இல்லை.”

ஆனால் இவ்வளவு உறுதியாக அறிவிப்பு விடுத்த ‘சுதந்திரப் பறவைகள்' தங்களுக்குள்ளேயே பிணங்கிக் கொண்டன- சில பிரிந்தும் போயின.

'வானம்பாடி இயக்கத்தில் அண்மையில் ஏற்பட்ட சலனங்களால் அதன் மைய வீதியை விட்டுச் சிலர் விலகிப் போயினர். இலக்கியப் பாதையில் அதிதீவிர அரசியல் முட்களை விதைக்கும் போலி முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்று விளக்க அறிக்கை கொடுத்து, வானம்பாடி’ தனது பாதையில் தொடர்ந்து முன்னேறியது.

'புத்தகச் சந்தை' யில் புதுக் கவிதைத் தொகுப்புகள் அதிகம் அதிகமாகவே வரலாயின. அவற்றில் சிலவற்றை வானம்பாடி (12-வது இதழிலிருந்து சுருக்கமாக-ஆனால், குத்தலும் கிண்டலும், சூடும் சுவையுமாகவிமர்சித்திருக்கிறது.

கால ஒட்டத்தில் 'வானம்பாடி' காலம் தவறி எவ்வெப்போதாவது வரலாயிற்று. வானம்பாடிக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளைத் தொகுப்புகளாக வெளியிடுவதில் ஆர்வம் கொண்டார்கள்.