பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

வல்லிக்கண்ணன்


உண்மையின் ஆன்மாவிலிருந்து பிறந்து, எந்தவித முகமூடியும் அணியாமல் உலா வரும் எழுத்துக்களால்தான் நமது இலக்கியத்தைக் காப்பாற்ற முடியும் என்பது எங்களது நம்பிக்கை.

எங்களது எழுத்துக்கள் எங்களிடமிருந்து பிதுக்கி எடுக்கப்பட்டவை அல்ல; ஒரு மலர் மலர்வது போல, ஒரு செடி வளர்வது போல இயல்பாக எழுந்தவை. எங்களின் எழுத்து எங்களைச் சுற்றி உள்ள மக்களின் குரல், நாங்கள் வாழும் காலத்தின் எதிரொலி,

எங்களது நம்பிக்கை எல்லாம், ஒரு சின்ன மெழுகுவத்தியின் வெளிச்சத்தை அணைக்கக் கூடிய அளவுக்கு இருள் இந்த உலகில் இல்லை என்பதுதான்.” ( வெளிச்சம் )

எழுத்தாளர் ஞானம்பாடி ( கவிஞர் இந்திரன்) த. கோவேந்தன் துணையுடன் சென்னையில் இந்த இதழைத் தொடங்கினார்.

'ஜெயகாந்தனுடன் ஒரு மணி நேரம்' என்ற சுவாரஸ்யமான கட்டுரை, கிராமியப் பாடல் பாணிக் கவிதை, இசைப் பாட்டு, ஹெர்மன் ஹெஸ் நாவலான சித்தார்த்தா அறிமுகம், மற்றும் புதுநானூறு’ எனும் அருமையான புதிய படைப்பு (நான்கு பாடல்கள் ) கோவேந்தன் எழுதியது. உதாரணத்துக்கு ஒன்று :

‘அருகன் வரின் என்? புத்தன் தோன்றில் என்? வள்ளுவன் மொழிந்தென்? மகம்மது முழக்கிலென்?
மார்க்க கிளர்ந்தென்? இலெனின் வினை ஆற்றி என்?
காந்தி எழுந்தென்? சுவைட்சர் அருளிஎன்?
திருத்தத் திருந்தாத் திருட்டுக் கயவர்கள்
உளவரை உருப்படாதுலகே.

'வெளிச்சம்' ஒரே ஒரு இதழ்தான் (ஜூன் 1979) வெளிவந்தது.

இப்படி சிதைந்த கனவுகள் எத்தனையோ !