பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

157


'ரினெய்லான்ஸ் லிட்டரேச்சர்' என்ற தன்மையில் மறுமலர்ச்சி இலக்கியம் என வழங்கி வந்த பிரயோகம் மறைந்து போயிற்று. தற்கால இலக்கியம் வெறுமனே 'இலக்கியம்' என்றே குறிக்கப்படுவதாயிற்று. சிறுகதை, நாவல், கவிதைகள், சுயசிந்தனைக் கட்டுரைகள் முதலியன ‘படைப்பிலக்கியம்' என்று பேசப்படலாயின.

1940 களில் 'முற்போக்கு இலக்கியம்' என்ற குரல் எழுந்தது. இது அரசியல் கட்சி சார்புடையதாகவே அமைந்தது. இப்போதும்கூட முற்போக்கு இலக்கியம் என்றால் கம்யூனிஸ்ட் சார்புடைய எழுத்துக்கள் என்று பொருள் கொள்வதே இயல்பாக இருக்கிறது.

சமூக உணர்வோடும்- சமுதாயப் பார்வையோடும்-மனிதாபிமானத்தோடும் (மனித நேயத்துடனும் ) எழுதப்படுகிற எழுத்துக்கள் பொதுவாக முற்போக்கு இலக்கியம் என மதிக்கப்படலாம்.

ஆனாலும், முற்போக்கு இலக்கிய ஆதரவாளர்கள் அத்துடன் திருப்தியடைய மாட்டார்கள். மார்க்ஸிய தத்துவ நோக்கில் சமூகப் பிரச்னைகளைக் கவனித்து-வரலாற்று அடிப்படையில் உண்மை ஆதாரங்களைச் சிந்தித்து- வளமான எதிர்காலத்துக்கு வர்க்க உணர்வோடு விடுதலை மார்க்கமும் நம்பிக்கை ஒளியும் காட்டக் கூடியதுதான் முற்போக்கு இலக்கியம் என வலியுறுத்துவர்.

இத்தன்மையில் முதன் முதலில் வழிவகுத்துக் காட்டியது 'ஜனசக்தி' பத்திரிகை ஆகும். அதன் வழியில் லோகசக்தி, நவசக்தி, புதுயுகம் போன்ற அநேக சிறு பத்திரிகை கம்யூனிஸக் கொள்கைகளையும் முற்போக்கு இலக்கியத்தையும் பரப்பப் பாடுபட்டன, 1940 களில்.

அவை எல்லாம், குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளை அல்லது படைப்புகளை நாட்டுக்கும் மொழிக்கும் தந்துவிடவில்லை.

கவிஞர் தமிழ் ஒளியும் தோழர் கோவிந்தன் என்பவரும் முற்போக்கு இலக்கியத்தை வளர்க்கவும் வளம் செய்யவும் 'புதுமை இலக்கியம்' என்றொரு பத்திரிகையை ஆரம்பித்தார்கள், 1949- ல், அது இரண்டு இதழ்களோடு மறைந்து போயிற்று.

ஐம்பதுகளில் கவிஞர் கே. சி. எஸ். அருணாசலம் 'நீதி' என்ற பத்திரிகையை நடத்தினார். பொள்ளாச்சியிலிருந்து வெளிவந்த இந்த