பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

வல்லிக்கண்ணன்


எழுத்தாளர்களை விமர்சித்து தி. க. சிவசங்கரன் ஒரு கட்டுரைத் தொடர் எழுதினார்.

உலக நாடக இலக்கியம் குறித்து எம். கே. மணி சாஸ்திரி எழுதிய கட்டுரைத் தொடர் பாராட்டப்பட வேண்டிய நற்பணியாகும்.

'தாமரை' இலக்கிய விவாதங்களையும் வளர்த்தது.

தாமரை வெகுகாலம் வரை புதுக் கவிதையை வரவேற்றதில்லை. வேக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த புதுக் கவிதையின் போக்கை- 'எழுத்து' பத்திரிகை வெளியிட்ட புதுக்குரல் கவிஞர்களது படைப்புகளை-மார்க்ஸிய தத்துவ நோக்கில் ஆய்வு செய்து, கண்டனக் கட்டுரைகளை தாமரை வெளியிட்டது. அவற்றுக்கான மறுப்புக் கட்டுரைகளையும் வரவேற்றுப் பிரசுரித்தது.

பின்னர் முற்போக்குப் பாணியில் எழுதப்படும் புதுக் கவிதைகளை விரும்பி வெளியிட்டது. புதிய கவிஞர்களுக்குப் பேராதரவு தந்தது.

ஆசிய, ஆப்பிரிக்க விடுதலைக் கவிஞர்களின் படைப்புகளைத் தமிழில் தந்தது தாமரை. வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், அதன் பின்னணியில் தோன்றிய இலக்கியங்களின் பெருமையையும் எடுத்துச் சொல்வதற்காக 'வியட்நாம்' மலர் வெளியிட்டது.

ஆசிரியர் குழுவினர் புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தனர். இளம் எழுத்தாளர்களுக்கு யோசனைகள் கூறி வழிகாட்டினர்.

இப்படிப் பல வகைகளிலும் 'தாமரை' க்கு ஒரு தனித்தன்மை உண்டாக்கிய, இலக்கிய ரசிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் அதற்கு விசேஷ கவனிப்பு ஏற்படும்படி செய்த ஆசிரியர் குழுவினர், நூறு இதழ்கள் தயாரித்து முடித்துப் பெயர் ஈட்டிய பெருமையோடும் மகிழ்ச்சியோடும் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்கள்.

அதிலிருந்து 'தாமரை' தனது பெருமையை இழக்கலாயிற்று. அதைப் பொறுப்பாகவும் உற்சாகத்துடனும், போதிய இலக்கிய ஈடுபாட்டுடனும் நிர்வகித்து அதன் தனித்தன்மையைப் பாதுகாப்பதற்கு ஏற்றவர்கள் இல்லாது போனது இலக்கியவாதிகளுக்கும் முற்போக்குவாதிகளுக்கும் வருத்தம் அளித்துக் கொண்டிருக்கும் ஒரு குறையே ஆகும்.