174
வல்லிக்கண்ணன்
எங்கள் இலக்கு மிகவும் உன்னதமானது. எங்கள் பயணம் மிகவும் புனிதமானது. எங்கள் பாதை மிகவும் கரடுமுரடானது. எங்கள் பார்வையோ மிகவும் தெளிவாயிருக்கிறது.
நாங்கள் பயணம் தொடங்கிவிட்டோம். இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது.
நாங்கள் : கலாமணி, மீராதாசன், ஜீவுகன், கார்க்கியன், பார்த்திபன்'.
சகாப்தம் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் உரிய தரமான பத்திரிகையாக வளர்ந்தது. இலக்கியவாதிகள், ரசிகர்கள் பலரும் அதன் இதழ்களைப் பாராட்டி வாழ்த்தினார்கள். கலாமணி ஆற்றல் உள்ள எழுத்தாளராகத் தெரியவந்தார்.
6-வது இதழ் முதல் அது 'மக்கள் சகாப்தம்' என்று பெயர் மாற்றம் பெற்று, 50 காசு விலையில், விற்பனைக்குரிய ஒரு பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது.
பெயர்பெற்ற எழுத்தாளர்கள் சிலரும், திறமையை நிரூபிக்க முயன்றுகொண்டிருந்த இளைய எழுத்தாளர்கள் பலரும் அதில் எழுதினார்கள். அதன் 10-வது இதழ் கவிதைச் சிறப்பிதழாகத் தயாராயிற்று.
'சகாப்தம்' அவ்வப்போது புத்தக விமர்சனம், திரைப்பட விமர்சனம், இலக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய அபிப்பிராயங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டது.
முதல் ஆண்டில் பத்து இதழ்களைக் கொண்டு வந்த சகாப்தம், இரண்டாம் வருஷத்தின் முதலாவது இதழை 1978 ஏப்ரல் மாதம் வெளியிட்டபோது, அந்த ஆண்டில் மேலும் 4 இதழ்கள் மட்டுமே பிரசுரமாகும் என்று மாதக் கணக்கிட்டு அறிவித்தது.
அந்தத் திட்டம்கூட நிறைவேறவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான்.