பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

187


'ஜே.ஜே. சில குறிப்புகள்' பற்றி ராஜ்கெளதமன் கட்டுரை.

'தான்—படைப்பு— இயங்கியல் உறவுகள்— ஓர் எக்ஸிஸ்டென்ஷியல் மார்க்ஸிய அணுகல்'—சாருநிவேதிதா எழுதியது.

ஆகிய விஷயங்கள் வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தவையாகும்.

1982 ஜூன் இதழில் இ. வெ. வ. ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இலக்கியம், கலை, கலாச்சாரம், சமூக விஷயங்களில் கவனம் செலுத்திய இ. வெ. வ. சாதி, சமயப் பிரச்னைகளுக்கு அதிகமான கவனிப்பைத் தரத் தீர்மானித்தது.

‘சமூகத்தின் சாதி, சமயப் பிரச்னைகள் முன்னுரிமை தந்து விவாதிக்கப்படும். வர்க்கப் பிரச்னையை மார்க்ஸியம் பிரதானப்படுத்துகிறது என்ற கவனத்தை நாங்கள் மறக்கவில்லை. சாதி, சமயப் பிரச்னைகளுக்குள் வர்க்கப் பிரச்னைகள் நீக்கமற நிறைந்திருப்பதை நாங்கள் குறித்துக் கொள்கிறோம். இதே போலத்தான் அரசியலும். அரசியல் தனி டிபார்ட்மெண்ட் என்று யாரும் நம்பவில்லை.'

இந்நோக்கில் நாட்டின் நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகள், தகவல்கள் இடம்பெற்றன.

1983-ல் இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலை பற்றி இ. வெ. வ. அதிகக் கவலையும் தீவிர அக்கறையும் காட்டியது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள சிறு பத்திரிகைச் சூழல் சார்ந்தவர்கள், மற்றும் கலாச்சார அமைப்புகள் இணைந்த கருத்தரங்கம் ஒன்றை ‘இலக்கிய வெளிவட்டம்' ஏற்பாடு செய்தது. 7-8-1983 அன்று மதுரையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சுயேச்சை எழுத்தாளர்கள்— படைப்பாளிகள் சிலரும் கலந்துகொண்டார்கள்.

அங்கே வெளியிடப்பட்ட கருத்துக்கள், தீர்மானங்கள் அனைத்தையும் தொகுத்துத் தரும் இ. வெ. வ. இதழ் நவம்பரில் வெளிவந்தது. இந்தச் சிறப்பிதழ் இலங்கைத் தமிழர் பிரச்னைகளையும் போராட்ட அனுபவங்களையும் தமிழ்நாட்டினருக்கு உணர்த்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இதழில் காணப்படும் சில விஷயங்கள்—

ஈழப் போராளிகளுடன் கலந்துரையாடல்.