பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

வல்லிக்கண்ணன்


இலக்கியப் பத்திரிகை செய்ய வேண்டிய ஒரு முக்கிய காரியத்தை மகாநதி தவறாமல் செய்து வந்திருப்பதைப் பாராட்ட வேண்டும். வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டிய நல்ல புத்தகங்களை விரிவான கட்டுரைகள் மூலம் அது அறிமுகம் செய்தது.

உருபுவின் நாவல் 'சுந்தரிகளும் சுந்தரன்மார்களும்', இந்திரா பார்த்தசாரதியின் நாடகம் ‘நந்தன் கதை', இன்குலாபின் 'வெள்ளை இருட்டு', சிற்பியின் 'சர்ப்பயாகம்', தமிழவனின் 'புதுக்கவிதை பற்றிய நாலு கட்டுரைகள்', ஐசக் அருமைராசனின் 'கீறல்கள்', வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்', ராஜம் கிருஷ்ணனின் 'அலைவாய் கரையில்' ஆகியவை பற்றிய கட்டுரைகள் அப் படைப்புகள் குறித்து அறிந்து கொள்ள உதவும்.

நல்ல திரைப்படங்கள் குறித்தும் விரிவான கட்டுரைகளை 'மகாநதி’ வெளியிட்டது. போலந்து திரைப்படம், ஆந்த்ரேவாய்தாவின் 'தி பிராமிஸ்ட் லேண்ட்', தெலுங்கு திரைப்படம், மிருணாள் ஸென்னின் 'ஒரு ஊரின் கதை' ஆகியவை முக்கியமானவை.

இந்த 'இரு மாதம் ஒருமுறை' இலக்கிய இதழ் அதிகமான கவிதைகளையும் வெளியிட்டது. ‘கவிஞன் உலகின் எதிரொலி; தன்னுடைய சொந்த ஆத்மாவின் அழுகுரல் அல்ல' என்ற மாக்சிம் கார்க்கியின் கூற்றைத் தனது கவிதைக் கொள்கையாகக் கொண்டு, சமுதாயப் பார்வையுடன் கூடிய புதுக் கவிதைகளையே இது பிரசுரித்தது. பரிணாமன், பொன்மணி, கே. சி. எஸ். அருணாசலம், சூர்யகாந்தன் உள்ளிட்ட பல கவிஞர்கள் தங்கள் படைப்புகளினால் மகாநதிக்கு உயிர்ப்பும் உணர்வும் அளித்தார்கள்.

புதுமைக் கருத்துக்கள் மக்களை அடைய வேண்டும் என்ற நோக்குடன் பரிணாமனும் மற்றும் சிலரும் நாட்டுப் பாடல் பாணியில் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். புதிய தாலாட்டு ஒன்றிரண்டையும் மகாநதி பிரசுரித்திருக்கிறது.

'ஒரு தொலைநோக்கு கொண்ட இதழ்' என்ற தன்னடக்கமான பெருமையுடன், தேசிய-சர்வதேசிய உள்ளடக்கம் நிறைந்ததுதான் தேசிய வாழ்வு என்ற பொறுப்புணர்ச்சியுடன், தேசிய வாழ்வில் இலக்கியத்திற்கும், கலை, கலாச்சாரத்திற்கும் பங்கு உண்டு என்ற அந்தரங்க சுத்தியுடன் செயல்பட்ட 'மகாநதி' தரமான முற்போக்கு இலக்கிய இதழாகத் திகழ்ந்தது.

இதுபோன்ற ஒரு பத்திரிகை இன்றும் தேவைதான். ஆனால், மகாநதி ஒன்பது இதழ்களோடு மறைந்து விட்டது.